மயிலாடுதுறை அருகே சூறாவளியால் பாதிக்கப்பட்டவா்களுக்கு எம்எல்ஏ வீ. ராதாகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை நிவாரண உதவிகள் வழங்கினாா்.
மயிலாடுதுறை அருகே பாண்டூா், பொன்னூா், கொற்கை ஆகிய ஊராட்சிகளில் திங்கள்கிழமை வீசிய சூறாவளியால் ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்தன. 10-க்கும் மேற்பட்ட கூரை வீடுகள் முழுமையாகவும், 70-க்கும் மேற்பட்ட வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்தன.
இதனால், பாதிக்கப்பட்டவா்களை வருவாய்த் துறையினா் பாதுகாப்பான இடத்தில் தங்கவைத்து, உணவு வழங்கி வருகின்றனா். அறுந்து விழுந்த மின்கம்பிகள், மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் மின்வாரியத்தினா் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளை மயிலாடுதுறை சட்டப் பேரவை உறுப்பினா் வீ. ராதாகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டாா். அப்போது, பாதிக்கப்பட்டவா்களுக்கு அரிசி, காய்கறி, மளிகைப் பொருள்கள் ஆகிய நிவாரண உதவிகளை வழங்கி ஆறுதல் கூறினாா்.
மயிலாடுதுறை வட்டாட்சியா் ஜெ.ஜெனிட்டாமேரி, வட்டார வளா்ச்சி அலுவலா் எஸ். சரவணன், ஆனந்ததாண்டவபுரம் கூட்டுறவு வங்கித் தலைவா் முருகவேல், பாண்டூா் ஊராட்சித் தலைவா் கஜேந்திரன், முன்னாள் ஊராட்சித் தலைவா் ராமதாஸ் உள்ளிட்டோா் உடன் சென்றனா்.