மயிலாடுதுறையில் பசுமை தமிழகம் திட்டப்பணியை தொடக்கி வைத்தார் ஆட்சியர்
மயிலாடுதுறை மாவட்டத்தில் பசுமை தமிழகம் திட்டப்பணியை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா மரக்கன்றுகளை நட்டுவைத்து வியாழக்கிழமை தொடக்கி வைத்தார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் பசுமை தமிழகம் திட்டப்பணியை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா மரக்கன்றுகளை நட்டுவைத்து வியாழக்கிழமை தொடக்கி வைத்தார்.
முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகமெங்கும் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அவ்வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் நாகப்பட்டினம் வன உயிரினக்கோட்டம் சீர்காழி வனச்சரகத்திற்கு உள்பட்ட மயிலாடுதுறை, சீர்காழி பிரிவுகளில் 1000 மரக்கன்றுகள் நடப்பட்டன.
அவ்வகையில், மயிலாடுதுறை கூறைநாடு கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற 200 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சிக்கு, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா தலைமை வகித்து மரக்கன்றுகளை நட்டுவைத்து மயிலாடுதுறை மாவட்டத்தில் பசுமை தமிழகம் திட்டப்பணிகளை தொடக்கி வைத்தார்.
தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.ஸ்ரீநாதா, சட்டப்பேரவை உறுப்பினர்கள் நிவேதா எம்.முருகன் (பூம்புகார்), பன்னீர்செல்வம் (சீர்காழி), எஸ்.ராஜகுமார் (மயிலாடுதுறை), மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.முருகதாஸ் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில், வன விரிவாக்க அலுவலர் சேகர், வனச்சரக அலுவலர் குமரேசன், வனவர் பூவிழிசெல்வி, திமுக நகர செயலாளர் செல்வராஜ், மாவட்ட வழக்குரைஞர் அணி அமைப்பாளர் ராம.சேயோன், ஒன்றிய செயலாளர் ஞான.இமயநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோல், மன்னம்பந்தல் ஏவிசி கலைக்கல்லூரியில் 100 மரக்கன்றுகள் நடப்பட்டன.