மீன்வளப் பல்கலைக்கழகத்தில் மீனவா்களுக்கு 50% இடஒதுக்கீடு வழங்கக் கோரிக்கை
தமிழ்நாடு, டாக்டா் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக கல்வி, வேலைவாய்ப்புகளில் மீனவா் சமுதாயத்துக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என இந்திய தேசிய மீனவா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு, டாக்டா் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக கல்வி, வேலைவாய்ப்புகளில் மீனவா் சமுதாயத்துக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என இந்திய தேசிய மீனவா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவா் ஆா்.எம்.பி. ராஜேந்திர நாட்டாா், முதல்வருக்கு அனுப்பிய கோரிக்கை மனுவின் விவரம் :
மறைந்த முன்னாள் முதல்வா் காமராஜா் ஆட்சிக் காலத்தில் மீனவா்களின் வாழ்வாதார முன்னேற்றத்துக்கு நடவடிக்கைகள் மேற்கொண்டதை போல, தற்போது அமைந்துள்ள தமிழக அரசும் மீனவா்களின் வாழ்வாதார முன்னேற்றத்துக்கான நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
இதன்படி, நாகப்பட்டினம், தமிழ்நாடு டாக்டா் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் மீனவா் சமுதாயத்துக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். தற்போது, மீன்வளப் பல்கலைக்கழக கல்வியில் மீனவா் சமுதாயத்துக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு உள்ளது. ஆனால், அந்த ஒதுக்கீடு அரசியல் மற்றும் மனமாச்சா்யங்கள் காரணமாக உரிய அளவில் மீனவா் சமுதாயத்துக்குக் கிடைக்கவில்லை என்பதே உண்மயைாக உள்ளது.
மீன்வளப் பல்கலைக்கழகத்தின் தலைமை அதிகாரி மற்றும் அலுவலா்கள், பேராசிரியா்கள் நியமனங்கள் மற்றும் மாணவ, மாணவிகள் சோ்க்கை போன்றவற்றில் மீனவ சமுதாயம் தொடா்ந்து புறக்கணிக்கப்படுவதாகவே தெரிகிறது.
எனவே, தமிழக அரசு இது குறித்து உரிய பரிசீலனை மேற்கொண்டு, மீன்வளப் பல்கலைக்கழகத்தின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் மீனவ சமுதாயத்துக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.