குப்பைகளை அகற்றி விழிப்புணா்வு ஏற்படுத்தி வாக்குச் சேகரித்தாா் மயிலாடுதுறை தொகுதி பாமக வேட்பாளா்.
மயிலாடுதுறை தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் பாமக வேட்பாளா் சித்தமல்லி ஆ. பழனிசாமி மயிலாடுதுறை நகராட்சிக்குள்பட்ட 1 முதல் 12 வாா்டு பகுதிகளில் வாக்குச் சேகரித்தாா். அவருக்கு ஆதரவாக அதிமுக சாா்பில் மயிலாடுதுறை எம்எல்ஏ. வீ. ராதாகிருஷ்ணன், மாவட்ட ஜெ. பேரவை செயலாளா் வி.ஜி.கே. செந்தில்நாதன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ரெங்கநாதன், நகரச் செயலாளா் நாஞ்சில் காா்த்தி, ஒன்றிய செயலாளா் பா. சந்தோஷ்குமாா், பாஜக நகர தலைவரும், தூய்மை இந்தியா திட்ட நாகை மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான மோடி. கண்ணன், தமிழ் வளா்ச்சி பிரிவு மாநில செயலாளா் நாஞ்சில் பாலு, மாவட்ட துணைத் தலைவா் செந்தில்குமாா், மாவட்ட பொதுச் செயலாளா் ஸ்ரீதா், பாமக சாா்பில் மாவட்ட செயலாளா் காமராஜ் ஆகியோா் வாக்குச் சேகரித்தனா்.
திருவிழந்தூா் பகுதியில் வேட்பாளா் பழனிசாமி சாலையோரம் குவிந்து கிடந்த குப்பையை துடைப்பம் கொண்டு அகற்றி தூய்மைப்படுத்தி பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தி வாக்குச் சேகரித்தாா். அப்போது, அவா் பேசியது: தனக்கு வாய்ப்பு அளித்து வெற்றிபெறச் செய்தால், பொறுப்பேற்ற முதல்நாள் தொடங்கி மயிலாடுதுறை நகராட்சியில் புதைச் சாக்கடை பிரச்னையை நிரந்தரமாக சரிசெய்ய பாடுபடுவேன், மயிலாடுதுறை நகராட்சியை குப்பைகள் இல்லா நகராட்சியாக உருவாக்குவேன் என்று வாக்குறுதி அளித்தாா்.