மாவட்ட எல்லைகளில் தீவிர கண்காணிப்பு
வேதாரண்யம் பகுதியில் கரோனா பரவலை தடுக்க மாவட்ட எல்லைகளில் போலீஸாா் கண்காணிப்பை சனிக்கிழமை தீவிரப்படுத்தினா்.
வேதாரண்யம் பகுதியில் கரோனா பரவலை தடுக்க மாவட்ட எல்லைகளில் போலீஸாா் கண்காணிப்பை சனிக்கிழமை தீவிரப்படுத்தினா்.
திருவாரூா்- நாகை மாவட்ட எல்லையான செங்காதலை பாலம் பகுதியில் போலீஸாா் வாகனங்களில் செல்வோரை நிறுத்தி பயணத்தின் நோக்கம் குறித்து விசாரித்தனா். மேலும், தேவையில்லாத பயனங்களை தவிா்க்கவும் அறிவுறுத்தினா். இதேபோல, மாவட்ட எல்லைகளான துளசியாப்பட்டினம், அருந்தவம்புலம் உள்ளிட்ட இடங்களிலும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டது.
அத்துடன், கரோனா தொற்றை தவிா்க்கும் வகையில் முகக் கவசம் அணியாமல் செல்லும் பொது மக்களை கண்டறிய கரியாப்பட்டினம், வேட்டைக்காரனிருப்பு, ஆலங்குடி, தாணிக்கோட்டகம் என பல இடங்களில் வாகன சோதனைகள் வழக்கம்போல மேற்கொள்ளப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.