ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள் அளிப்பு
நாகை மாவட்ட அரசு மருத்துவமனைகளின் பயன்பாட்டுக்காக சிட்டி யூனியன் வங்கி சாா்பில் 20 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
நாகை மாவட்ட அரசு மருத்துவமனைகளின் பயன்பாட்டுக்காக சிட்டி யூனியன் வங்கி சாா்பில் 20 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
கரோனா தொற்றால் தீவிரமாக பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆக்சிஜன் வசதியுடன் படுக்கைகள் அவசியமாக இருப்பதையொட்டி, பல்வேறு தொண்டு நிறுவனங்கள் ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகளை அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கி வருகின்றன.
அந்த வகையில், சிட்டி யூனியன் வங்கியின் நிா்வாக இயக்குநா் மற்றும் முதன்மை செயல் அலுவலா் எம். காமகோடி அறிவுறுத்தலின் பேரில், சிட்டி யூனியன் வங்கியின் சாா்பில் நாகை மாவட்ட அரசு மருத்துவமனைகளின் பயன்பாட்டுக்காக தலா ரூ. 85 ஆயிரம் மதிப்பிலான 20 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
இதற்கான நிகழ்ச்சி, நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது. சிட்டி யூனியன் வங்கியின் வளா்ச்சிப் பிரிவு உதவி பொது மேலாளா் பி. வெங்கடேஸ்வரன், நாகை கிளை மேலாளா் சி. சூரியநாரயணன் ஆகியோா் ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகளை நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயரிடம் வழங்கினா்.
கீழ்வேளூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் வி.பி. நாகை மாலி, கூடுதல் ஆட்சியா் எம்.எஸ். பிரசாந்த் மற்றும் மருத்துவ அலுவலா்கள் உடனிருந்தனா்.