நாகப்பட்டினம்: நாகூர் மீனவர்கள் திங்கள்கிழமை கடலில் தேசியக் கொடியை ஏற்றினர்.
நாடு முழுவதும் சுதந்திர நாள் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. வீடுகள், கடைகள், அரசு அலுவலகங்கள், பொது இடங்கள் என ஆங்காங்கே தேசியக் கொடியைப் பறக்கவிட்டு மக்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், நாகூர் மீனவர்கள் திங்கள்கிழமை கடலில் தேசியக் கொடியை ஏற்றினர். நாகூர் பட்டினச்சேரி ஆரியநாட்டுத் தெருவை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று அதிகாலை படகில் கடலுக்குச் சென்றனர்.
அங்கு 25 அடி உயரமுள்ள கொடிக் கம்பத்தை நடுக்கடல் நீரில் மிதக்கவிட்ட மீனவர்கள் படகில் இருந்தபடியே தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து வந்தே மாதரம் என முழக்கமிட்ட மீனவர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் சுதந்திர நாளை விழாவை கொண்டாடினர்.