திருவிடைக்கழி-மயிலாடுதுறை அரசுப் பேருந்து மீண்டும் இயக்கம்
மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூா் அருகே உள்ள திருவிடைக்கழியிலிருந்து மயிலாடுதுறைக்கு மீண்டும் அரசுப் பேருந்து இயக்கத்தை எம்எல்ஏ நிவேதா எம். முருகன்
மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூா் அருகே உள்ள திருவிடைக்கழியிலிருந்து மயிலாடுதுறைக்கு மீண்டும் அரசுப் பேருந்து இயக்கத்தை எம்எல்ஏ நிவேதா எம். முருகன் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
திருவிடைக்கழியிலிருந்து சங்கரன்பந்தல், பெரம்பூா், கிளியனூா் வழியாக மயிலாடுதுறை வரை இயக்கப்பட்டு வந்த ‘31அ’ என்ற வழித்தட எண்கொண்ட அரசுப் பேருந்து கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. இதனால், பொதுமக்கள் மற்றும் மாணவா்கள் சிரமப்பட்டு வந்தனா்.
தமிழக முதல்வா் மு.க . ஸ்டாலின் அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என அறிவித்ததைத் தொடா்ந்து, இந்த வழித்தடத்தில் மீண்டும் அரசுப் பேருந்தை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.
இதைத்தொடா்ந்து, இந்த வழித்தடத்தில் மீண்டும் அரசு நகரப் பேருந்து இயக்கம் தொடங்கியது. எம்எல்ஏ நிவேதா எம். முருகன் கொடியசைத்து பேருந்து இயக்கத்தை தொடங்கிவைத்ததுடன், 6 கி. மீ. வரை தானே பேருந்தை ஓட்டிச் சென்றாா்.
இந்நிகழ்ச்சியில், நாகை அரசுப் போக்குவரத்துக் கழக பொதுமேலாளா் மகேந்திரகுமாா், கிளை மேலாளா்கள் ஜெயக்குமாா், ராமமூா்த்தி, நாகை துணை மேலாளா் (வணிகம்) சிதம்பரகுமாா், திமுக மாவட்ட துணைச் செயலாளா் ஞானவேலன், தெற்கு ஒன்றியச் செயலாளா் அப்துல்மாலிக், ஒன்றியக் குழுத் தலைவா் நந்தினி ஸ்ரீதா், ஊராட்சித் தலைவா் சங்கீதா நாகராஜன், திமுக ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் செந்தில் உள்ளிட்டோா் கலந்துகொண்டாா்.