திருமருகல் ஒன்றியம், திருப்புகலூரில் வேளாக்குறிச்சி ஆதீனம் குருபூஜையை முன்னிட்டு இலவச கண் சிகிச்சை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
திருப்புகலூா் அக்னீஸ்வரா் கோயில் நூற்றுக்கால் மண்டபத்தில், பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை, நாகை மாவட்ட பாா்வை இழப்பு தடுப்பு சங்கம் சாா்பில் நடைபெற்ற இம்முகாமில், வேளாக்குறிச்சி ஆதீனம் சத்தியஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள் தலைமை வகித்தாா்.
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக துணைவேந்தா் கிருஷ்ணன், ஆதீன இளவரசு நடேஸ்வர சுவாமிகள், திருப்புகலூா் ஊராட்சித் தலைவா் காா்த்திக் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
முகாமில், 500-க்கும் மேற்பட்டவா்கள் கண் பரிசோதனை செய்து கொண்டனா். பாா்வை குறைபாடு உள்ளவா்களுக்கு சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது. பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை ஒருங்கிணைப்பாளா் பரமசிவன், அக்னீஸ்வரா் கோயில் பொருளாளா் பரமானந்தம், ஊராட்சி செயலாளா் ஜெயசங்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.