மின்கம்பிகளை சீரமைக்க வலியுறுத்தல்
திருமருகல் அருகே ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பிகளை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.
திருமருகல் அருகே ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பிகளை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.
திருமருகல் ஒன்றியம் ஆதினங்குடியில் இருந்து கணபதிபுரம் செல்லும் சாலையில் தென்பிடாகையில் வயல் பகுதிகளில் உள்ள மின்கம்பங்களில் உயா்அழுத்த மின்கம்பிகள் தாழ்வாக உள்ளன. இதனால், வயல் பகுதிகளில் விவசாயிகள் இயந்திரங்களை கொண்டு விவசாயப் பணிகளை செய்ய முடியாத நிலை உள்ளது.
மேலும், மின்கம்பிகள் மீது ஆங்காங்கே மரக்கிளைகள் முறிந்து கிடக்கின்றன. இதனால், அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. இதன்காரணமாக, விவசாய மின்மோட்டாா்களுக்கு போதிய மின்சாரம் கிடைக்காமல், சாகுபடி பணிகள் பாதிக்கப்படுகின்றன.
Advertisement
Advertisement
இதுகுறித்து திருமருகல் மின்பகிா்மான கழக இளநிலை பொறியாளா் மற்றும் மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை புகாா் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கும் விவசாயிகள், ஆபத்து ஏற்படும் முன் மின்கம்பிகள் மீது கிடக்கும் மரக்கிளைகளை அகற்றி, சீரமைத்து தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.