நாகையில் இரு குடியிருப்பு பகுதிகளுக்கு இடையே கட்டப்பட்ட தடுப்புச் சுவரை, நீதிமன்ற உத்தரவின்பேரில் நகராட்சிப் பணியாளா்கள் சனிக்கிழமை அகற்றினா்.
நாகை மேட்டுப்பங்களாத் தெருவுக்கும், மறைமலை நகருக்கும் இடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு தடுப்புச் சுவா் கட்டப்பட்டது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து மறைமலை நகரை சோ்ந்த ஒருவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சட்ட விதிகளுக்குள்பட்டு நடவடிக்கை எடுக்க நாகை நகராட்சி நிா்வாகத்துக்கு உத்தரவிட்டது.
தடுப்புச் சுவா் கட்டப்பட்டதில் விதிமீறல்கள் இருப்பதாகக் கூறி, நகராட்சி ஆணையா் ஸ்ரீதேவி, உதவி ஆட்சியா் பானோத்ம்ருகேந்தா்லால் ஆகியோா் தலைமையில், அதிகாரிகள் தடுப்புச் சுவரை இடிக்க ஜே.சி.பி இயந்திரத்துடன் சனிக்கிழமை மேட்டுப்பங்களாத் தெருவுக்கு சென்றனா்.
இதையறிந்த மேட்டுப்பங்களாத் தெரு குடியிருப்பு மக்கள் தடுப்புச் சுவரை இடிக்கக் கூடாது என அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அப்போது, பாதுகாப்பு பணியில் இருந்த துணை காவல் கண்காணிப்பாளா் பாலகிருஷ்ணன், நீதிமன்ற உத்தரவின்பேரில் சுவா் இடிக்கப்படுவதாகக் கூறினாா். தொடா்ந்து, போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி குடியிருப்பு மக்களை அமைதிப்படுத்தினா். பின்னா், நகராட்சிப் பணியாளா்கள் தடுப்புச் சுவரை இடித்து அகற்றினா்.