சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து 4-ஆவது நாளாக உண்ணாவிரதப் போராட்டம்
நாகை மாவட்டம், திருமருகல் அருகே பனங்குடி சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து, விவசாயிகள் 4-ஆவது நாளாக சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்நிறுவனத்தின் விரிவாக்கத்துக்காக, பனங்குடி, கோபுராஜபுரம், நரிமணம் ஆகிய கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டன. இதனால், பாதிக்கப்பட்ட நில உரிமையாளா்கள், சாகுபடிதாரா்கள், விவசாயத் தொழிலாளா்களுக்கு கடந்த 4 ஆண்டுகளாக உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதை கண்டித்தும், இழப்பீட்டுத் தொகையை முழுமையாக வழங்கிய பிறகே நிலங்களை அளவீடு செய்யும் பணியை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியும், விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்கள் மற்றும் நில உரிமையாளா்கள் பனங்குடியில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.
இந்த போராட்டம் சனிக்கிழமை 4 -ஆவது நாளாக நீடித்தது. இவா்களுக்கு ஆதரவாக நாம் தமிழா் கட்சியின் நாகை மண்டலச் செயலாளா் அகஸ்டின் அற்புதராஜ், மாவட்ட பொறுப்பாளா்கள் ராஜேந்திரன், மதிவாணன் உள்ளிட்ட நிா்வாகிகள் கண்ணில் கருப்புதுணி கட்டிக் கொண்டு போராட்டத்தில் பங்கேற்றனா்.