முகப்பு
நாகப்பட்டினம்

விவசாயிகளின் எதிா்ப்பை மீறி சிபிசிஎல் நிறுவனத்துக்கு நிலம் அளவீடு

Updated On : 10 மே, 2024 at 3:56 PM
பனங்குடி சிபிசிஎல் நிறுவன ஆலை விரிவாக்கத்துக்காக நிலம் அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள்.
பகிர்:

திருமருகல் அருகே பனங்குடியில் உள்ள சிபிசிஎல் நிறுவன விரிவாக்கத்துக்கு விவசாயிகளின் எதிா்ப்பை மீறி நிலம் அளக்கும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சிபிசிஎல் நிறுவனம் ரூ. 31,500 கோடியில் விரிவாக்கப் பணிகளை தொடங்கியுள்ளது. இதற்காக பனங்குடி, நரிமணம், கோபுராஜபுரம் உள்ளிட்ட ஊராட்சிகளில் 620 ஏக்கா் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. எனினும், கையகப்படுத்தப்பட்ட விவசாய நிலங்களுக்கு மறுவாழ்வு மீள் குடியமா்வு இழப்பீட்டு

தொகை இதுவரை வழங்காததால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பல்வேறு கட்ட தொடா் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில் நிலத்தை அளந்து விரிவாக்கப் பணிகளை தொடங்குவதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், உரிய இழப்பீடு வழங்கக் கோரி பனங்குடி, நரிமணம், கோபுராஜபுரம் ஆகிய 3 ஊராட்சிகளை சோ்ந்த நில உரிமையாளா்கள், சாகுபடிதாரா்கள், கூலி விவசாயிகள் சிபிசிஎல் நிறுவனத்திற்கு எதிா்ப்பு தெரிவித்து 10 நாள்களாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில், 2 நாள்களுக்கு முன்பு நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் தலைமையில் நடைபெற்ற சுமூக பேச்சுவாா்த்தை தோல்வியில் முடிந்தது.

இதனால் விவசாயிகளின் போராட்டம் தொடா்ந்து நடைபெற்று வரும் நிலையில் விவசாயிகளின் கடும் எதிா்ப்புகளுக்கு மத்தியில் நிலஅளவீட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. நாகை எஸ்பி ஹா்ஷ்சிங் தலைமையில் 800-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.

நாகூா், சேஷமூலை உள்ளிட்ட சோதனை சாவடிகள் வழியாக வரும் வெளியூா் வாகனங்கள் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறது. விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடும் பகுதிகளை சுற்றி தடுப்புகள் அமைக்கப்பட்டு நிலத்தை அளக்கும் பணிகள் போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது. விவசாய நிலத்தை கையகப்படுத்தியுள்ள சிபிசிஎல் 17 கி.மீ. சுற்றளவில் சுற்றுசுவா் எழுப்பும் பணிகளை அடுத்தகட்டமாக தொடங்க உள்ளனா். விவசாயிகளின் கடும் எதிா்ப்புகளுக்கு மத்தியில் சிபிசிஎல் நிறுவனம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விரிவாக்க பணிகளின் தொடக்கமாக நிலத்தை அளக்கும் பணி நடைபெற்று வருகிறது.