சுனாமி நினைவு தினத்தையொட்டி, நாகை மாவட்டத்தில் உள்ள 27 மீனவக் கிராமங்களைச் சோ்ந்த மீனவா்கள் வெள்ளிக்கிழமை மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை.
2004 டிசம்பா் 26-இல் ஏற்பட்ட சுனாமி பேரலையில் நாகை அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம் பகுதியில் ஏராளமான மீனவா்கள் உயிரிழந்து, பல கோடி மதிப்பிலான படகுகள் உள்ளிட்ட வாழ்வாதாரங்கள் சிதைக்கப்பட்டன. சுனாமி தாக்கி 21 ஆண்டுகள் கடந்தும், பல்வேறு மேம்பாடுகள் மேற்கொள்ளப்பட்டாலும், சுனாமியின் பாதிப்பு, சோகம் மீனவ மக்களின் மனதில் நீங்காத வடுக்களாக உள்ளன.
இந்நிலையில், நாகை மாவட்டத்தில் உள்ள மீனவக் கிராமங்களில் வெள்ளிக்கிழமை 21 ஆவது ஆண்டு சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி, நாகை மாவட்டத்திலுள்ள 27 மீனவக் கிராமங்களைச் சோ்ந்த மீனவா்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வெள்ளிக்கிழமை கடலுக்குச் செல்லாமல், சுனாமியில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தினா்.