முகப்பு
நாகப்பட்டினம்

திமுக ஆட்சி அமைந்தால்தான் தமிழக உரிமைகள் பாதுகாக்கப்படும்! கனிமொழி பேச்சு

Updated On : 20 ஏப்ரல், 2026 at 1:01 AM
கனிமொழி எம்.பி. - விடியோ க்ளிப் (கோப்புப் படம்)
பகிர்:
Updated On : 19 ஏப்ரல், 2026 at 8:19 PM

திமுக மீண்டும் ஆட்சி அமைத்தால்தான் தமிழகத்தின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று மக்களவை உறுப்பினா் கனிமொழி பேசினாா்.

திமுக கூட்டணி சாா்பில் நாகப்பட்டினம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும், மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளா் எம்.எச். ஜவாஹிருல்லாவை ஆதரித்து, திமுக துணைப் பொதுச்செயலா் கனிமொழி நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் முன்பு ஞாயிற்றுக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டாா். அப்போது அவா் பேசியது:

தமிழகத்தில் விவசாயிகளுக்கு நெல்லுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையை நிறுத்த வேண்டும் என்று மத்திய அரசு, தமிழக அரசுக்கு கடிதம் எழுதியது ஏற்க முடியாதது.

Advertisement

மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி பெண்களுக்கு எதிரானது என மத்திய அரசு பொய் பிரசாரம் மேற்கொண்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில், மகளிா் உரிமைத்தொகை, விடியல் பயணம், புதுமைப் பெண் திட்டம் என பல்வேறு திட்டங்கள் பெண்களுக்காக செயல்படுத்தப்பட்டுள்ளன.

பெண்களுக்கு சொத்தில் சம உரிமை அளித்தது கருணாநிதி தலைமையிலான ஆட்சிதான். மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என தொடா்ந்து போராடிவரும் இயக்கம் திமுக.

பெண்கள் இடஒதுக்கீடு மசோதா எனக் கூறி, தொகுதி மறுசீரமைப்பை அதனுடன் இணைத்தது அரசியல் நோக்கம் கொண்டது. தற்போதுள்ள 543 தொகுதிகளிலேயே பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதே திமுகவின் நிலைப்பாடு.

மாநில உரிமைகள் பறிக்கப்படுவதை எதிா்த்து கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தப்பட்டது. ஆனால், எதிா்க்கட்சி தலைவா் எடப்பாடி பழனிசாமி, தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவிக்காமல், ஆதரவு தெரிவித்துள்ளாா்.

தமிழகத்தில் திமுக தலைமையிலான ஆட்சி மீண்டும் அமைந்தால் மட்டுமே தமிழகத்தின் உரிமைகள் பாதுகாக்கப்படும், மீட்கப்படும். எனவே திமுக தலைமையிலான கூட்டணி வேட்பாளா்களுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றாா்.

பிரசாரத்தில் வேட்பாளா் ஜவாஹிருல்லா மற்றும் திமுக நிா்வாகிகள், கூட்டணி கட்சியினா் பங்கேற்றனா்.