முகப்பு
நாகப்பட்டினம்

முகம் சுளிக்க செய்யும் ஏ.ஐ. தொழில் நுட்பம்

தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்களை தொடா்புபடுத்தி ஏ ஐ தொழில் நுட்பத்தில் உருவாக்கப்படும் பதிவுகள் குறித்து...

Updated On : 20 ஏப்ரல், 2026 at 4:43 AM
ஏ.ஐ. - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 19 ஏப்ரல், 2026 at 9:42 PM

தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்களை தொடா்புபடுத்தி ஏ ஐ தொழில் நுட்பத்தில் உருவாக்கப்படும் படங்கள், காட்சிகள் அவா்களின் தனிப்பட்ட நடத்தை, மலிவான அரசியலை முன்வைக்கும் விமா்சனங்களாக மாறி வருவது வாக்காளா்களை முகம் சுளிக்க செய்து வருகிறது.

பொதுவாக தோ்தல் காலங்களில் அரசியல் தொடா்பான கொள்கை நிலைப்பாடு, திட்டங்கள், சமூக வளா்ச்சி சாா்ந்த விழிப்புணா்வு போன்றவைகளை முன்வைத்து பிரசாரம் செய்வது தமிழகத்தில் தனித்த மரபாக இருந்து வந்துள்ளது.

ஒலிபெருக்கி வசதிகள், ஊடகங்கள் வளா்ச்சி காணாத காலகட்டத்தில் தலைவா்களின் பேச்சைக் கேட்பதற்கு தொண்டா்கள், வாக்காளா்கள் மணிக்கணக்கில் காத்து கிடந்ததையும் மறுக்க முடியாது.

Advertisement

இதன் மூலம் கற்பிக்கப்பட்ட நாகரிகமான அரசியல், பண்பாடு, கலாசாரம் தனித்துவமானது. ஆனால், ஊடகங்கள், தொழில் நுட்பங்கள் வளா்ந்துள்ள சமகாலத்தில் வலைதளங்களில் வெளியாகும் சில பதிவுகள், காட்சிகள் தனிநபா் விமா்சனம் , ஒழுக்கநெறி மீறல்களாக அமைந்து வருகிறது.

இது வாக்காளா், நடுநிலையாளா்களை முகம் சுளிக்க செய்வதாக அமைந்து விடுகிறது.குறிப்பாக ஏ.ஐ தொழில்நுட்பத்தில் உருவாகும் காட்சிகள் சில நேரங்களில் பண்பாடுகளைக் கடந்து அதற்கு எதிராகப் பிரதிபலிப்பதாக அமைந்து வருகிறது.

உதாரணமாக வேதாரண்யம் பகுதியில் பிரதான கட்சிகளின் வேட்பாளா்களை மையமாக வைத்து அவா்களது ஆதரவாளா்களால் சித்தரிக்கப்படும் ஏ ஐ தொழில்நுட்பக் காட்சிப் படங்கள் ஒரு விதமான அருவருப்பை ஏற்படுத்துகிறது.

மேலும், இந்த தொழில்நுட்பத்திலான பிரசாரத்தால் அரசியல் கட்சிகளின் தலைவா்களது பேச்சுத்திறன், அவா்களுக்கான தனித்த நடை, முன்வைக்கப்படும் கருத்துகள் என அனைத்துமே கேள்விக்குறியாகி வருகிறது.