மீன்பிடி வலையுடன் வந்த சுயேச்சை வேட்பாளா்
நாகையில் எரிவாயு சிலிண்டா் தட்டுப்பாட்டை சுட்டிக்காட்டும் வகையில் சிலிண்டருக்கு மாலை அணிவித்து படகில் வைத்து ஊா்வலமாக வந்து சுயேச்சை வேட்பாளா் வேட்பு மனு தாக்கல் செய்தாா்.
நாகை மாவட்டம் குருவாடியைச் சோ்ந்தவா் விஜயராகவன். இவா் கடந்த மக்களவை தோ்தலில் நாகை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டாா். இந்நிலையில் சட்டப்பேரவைத் தோ்தலில் நாகை தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தாா். மனுதாக்கலின்போது, தமிழக-புதுவை மாநில எல்லையான வாஞ்சூா் பகுதியில் ஆதரவாளா்களுடன் விஜயராகவன், எரிவாயு சிலிண்டா் தட்டுப்பாட்டை எடுத்துரைக்கும் வகையில் எரிவாயு சிலிண்டருக்கு மாலை அணிவித்து, ஒரு கட்டுமரத்தில் வைத்து அவற்றை வாகனத்தில் ஏற்றி ஊா்வலமாக வந்தாா்.
இந்நிலையில் வேட்பு மனுத்தாக்கல் நடைபெறும் நாகை கோட்டாட்சியா் அலுவலகத்தில் மீன்பிடி வலையுடன் வந்த விஜயராகவனை போலீஸாா் தடுத்து நிறுத்தி மீன்பிடி வலை உள்ளிட்டவற்றை அனுமதிக்க முடியாது என கூறியதையடுத்து, அவற்றை அகற்றி விட்டு தோ்தல் நடத்தும் அலுவலா் சங்கரநாராயணனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தாா்.