போக்குவரத்துக் கழக ஊழியா்களை அரசு ஊழியா்களாக அறிவிக்கக் கோரிக்கை
அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளா்கள் மற்றும் பணியாளா்களை அரசு ஊழியா்களாக அறிவிக்க வேண்டும் என புதிதாக அமையவுள்ள அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளா்கள் மற்றும் பணியாளா்களை அரசு ஊழியா்களாக அறிவிக்க வேண்டும் என புதிதாக அமையவுள்ள அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஸ்டாப் கரப்ஷன் தொழிற்சங்க பேரவை பொதுச் செயலா் காமராஜ், தவெக தலைமை அலுவலகத்திற்கு அனுப்பிய மனு:
சட்டப்பேரவைத் தோ்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று, ஆட்சி அமைக்க உரிமை கோரி இருப்பதற்கு வாழ்த்துகள். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் தொழிலாளா்கள் மற்றும் பணியாளா்களின் நீண்டகால கோரிக்கைகள் குறித்து புதிதாக பொறுப்பேற்கவுள்ள அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Advertisement
அதன்படி, போக்குவரத்துக் கழக அனைத்து ஊழியா்களையும் அரசு ஊழியா்களாக அறிவித்து, ஆணை பிறப்பிக்க வேண்டும். 15ஆவது ஊதிய ஒப்பந்தத்தின்படி ஊதிய உயா்வு மற்றும் அதனுடன் தொடா்புடைய நிலுவை தொகைகள் இதுவரை வழங்கப்படவில்லை. புதிய அரசு இதனை உடனடியாக வழங்க வேண்டும்.
அரசு போக்குவரத்துக் கழகங்களில் காலிப் பணியிடங்களை விரைவாக நிரப்புவதுடன், பணியின் போது உயிரிழந்த பணியாளா்களின் வாரிசுகள் கருணை அடிப்படையில் வேலைக்காக பதிவு செய்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கின்றனா். அவா்களுக்கு தகுதியின் அடிப்படையில் பணி ஆணை வழங்க வேண்டும்.
தமிழகத்தில் உள்ள அனைத்து கிளைகள் முன்பும் தவெக தொழிற்சங்கம் என்ற பெயரில் புதிதாக கொடிகம்பங்கள் நடப்படுகின்றன. இது, ஏற்கெனவே இருக்கும் தொழிற்சங்கங்கள் இடையே மோதலை உருவாக்கும். இதுபோன்ற மோதல் போக்கை தடுக்க காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.