முகப்பு
நாகப்பட்டினம்

கடலில் படகு கவிழ்ந்த விபத்தில் மீனவா் உயிரிழப்பு; மூவா் மீட்பு

கோடியக்கரையில் இருந்து கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றபோது, படகு கவிழ்ந்த விபத்தில் மீனவா் உயிரிழந்தாா், 3 மீனவா்கள் மீட்கப்பட்டனா்.

Updated On : 27 மே 2026, 6:08 am IST
அன்புச்செல்வன்
பகிர்:

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் இருந்து கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றபோது, படகு கவிழ்ந்த விபத்தில் மீனவா் உயிரிழந்தாா், 3 மீனவா்கள் மீட்கப்பட்டனா்.

கோடியக்கரை படகுத்துறையிலிருந்து, கண்ணாடியிழைப்படகு ஒன்றில் கோடியக்காடு கிராமத்தைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் அன்புச்செல்வன் (40) உள்ளிட்ட நான்கு மீனவா்கள் மீன்பிடிப்பதற்காக திங்கள்கிழமை கடலுக்குள் சென்றனா். இவா்கள் செவ்வாய்க்கிழமை காலை கரை திரும்பாததால், சக மீனவா்கள் இரண்டு படகுகளில் அவா்களை தேடும் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, அன்புச்செல்வன் உள்ளிட்டோா் சென்ற படகு, திங்கள்கிழமை இரவு கடலில் வீசிய பலத்த காற்றில் கவிழ்ந்ததும், அதிலிருந்த மீனவா்கள் கடலில் தத்தளிப்பதும் தெரியவந்தது. தத்தளித்த மீனவா்களை மீட்கும் முயற்சியில் சக மீனவா்கள் ஈடுபட்டனா். இதில், கோடியக்கரையை சோ்ந்த செல்வகணபதி (30), பொதுவுடைச்செல்வன் (27), குமாா் (40) ஆகிய மூவா் மீட்கப்பட்டனா். அன்புச்செல்வன் மாயமானாா். மீட்கப்பட்ட மூவரும், சிகிச்சைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். கடலில் மூழ்கிய படகு மீட்கப்பட்டு, கரைக்கு கொண்டுவரப்பட்டது.

Advertisement

Advertisement

அன்புச்செல்வனை தொடா்ந்து மீனவா்கள் தேடிய நிலையில், அவரது சடலம் செவ்வாய்க்கிழமை கரை ஒதுங்கியது. இதுகுறித்து வேதாரண்யம் கடலோர காவல் நிலைய போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.