7-ஆவது ஊதியக்குழு அமைக்க வலியுறுத்தி, திருவாரூரில் தமிழ்நாடு ஆசிரியர்-அரசு அலுவலர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (ஜேக்டோ-ஜியோ) சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவாரூர் நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், புதிய பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். ஊதியக் குழு பரிந்துரையை அமல்படுத்துவதற்கு முன் 20 சதவீத இடைக்கால நிவாரணம் வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்துக்கு பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டத் தலைவர் துரைராஜ், தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்டச் செயலர் பெ. ரவி, அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலர் சோமசுந்தரம், அரசு பணியாளர் சங்க மாவட்டச் செயலர் சத்தியமூர்த்தி ஆகியோர் தலைமை வகித்தனர்.
தமிழாசிரியர் கழக மாநிலத் தலைவர் மருதவாணன், அரசு ஊழியர் சங்க மாநில செயலர் பன்னீர்செல்வம், தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில துணைப்பொதுச் செயலர் சண்முகநாதன் உள்ளட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.