கூத்தாநல்லூரில் டெங்கு தடுப்பு நடவடிக்கை: நகராட்சி ஆணையர் ஆய்வு
கூத்தாநல்லூர் நகராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக புதன்கிழமை வீடு வீடாகச் சென்று, தேவையற்ற பொருள்களை நகராட்சி பணியாளர்கள் அப்புறப்படுத்தினர்.
கூத்தாநல்லூர் நகராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக புதன்கிழமை வீடு வீடாகச் சென்று, தேவையற்ற பொருள்களை நகராட்சி பணியாளர்கள் அப்புறப்படுத்தினர்.
கூத்தாநல்லூர் நகராட்சியில் உள்ள 24 வார்டுகளிலும் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பனங்காட்டாங்குடி, பூதமங்கலம், நடுத்தெரு, தமிழர் தெரு , திருநெய்ப்புத் தெரு உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை சுகாதாரப் பணிகள் நடைபெற்றன. பணியின்போது, டெங்கு தடுப்பு நடவடிக்கையாக வீடு வீடாகச் சென்று, தேவையற்ற பாத்திரங்கள், கொட்டாங்கச்சி, தேங்காய் மட்டைகள், டயர்கள், பாட்டில்கள் மற்றும் கீற்றுகள் உள்ளிட்ட பயன்பாடில்லாத பொருள்களை நகராட்சிப் பணியாளர்கள் அப்புறப்படுத்தினர்.
இப் பணியை ஆய்வு செய்த நகராட்சி ஆணையர் எஸ். புவனேஸ்வரன், பொதுமக்கள் தங்கள் இருப்பிடத்தையும், சுற்றுப்புறத் தையும் தூய்மையாக வைத்துக் கொள்ளவேண்டும். திறந்த வெளியில் மலம் கழிக்கக் கூடாது. டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு தரவேண்டும் என கேட்டுக்கொண்டார்.