கூத்தாநல்லூர் கீழத்தெருவில் அமைந்துள்ள கல்யாணசுந்தரேசுவரர் கோயிலில் கந்த சஷ்டியை முன்னிட்டு, சுப்ரமணிய சுவாமி சிறப்பு வீதியுலா சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
முன்னதாக, கோயில் மூலவர் கல்யாணசுந்தரேசுவரர், மங்களாம்பிகைக்கு மஞ்சள் பொடி, பால், தயிர், சந்தனம், பஞ்சாமிர்தம், பன்னீர் உள்ளிட்ட அனைத்து திரவியங்களாலும் கோயில் குருக்கள் எம். தினகர் சிறப்பு அபிஷேகங்கள் செய்தார்.
பரம்பரை அறங்காவலர் எம். சுப்ரமணியன், சக்தி செல்வராஜ், வரதராஜன், நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் எஸ்.வி. பக்கிரிசாமி, செல்வநாராயணன் உள்ளிட்டோர் சுவாமி தரிசனம் செய்தனர்.
இதுகுறித்து பரம்பரை அறங்காவலர் எம். சுப்ரமணியன் கூறியது: இக்கோயிலில் பிரதோஷம், கார்த்திகை, சஷ்டி மற்றும் சித்திரை மாதம் என அனைத்து சிறப்பு நாள்களிலும் உபயதாரர்கள் மூலம் விசேஷ அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகின்றன. வரும் 25 -ஆம் தேதி சூரசம்ஹாரமும், 26 -ஆம் தேதி சுவாமி திருக்கல்யாண வைபவமும் நடைபெறுகிறது என்றார்.
இதைத்தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் சுப்ரமணிய சுவாமி கீழத்தெரு, கூத்தாநல்லூர் பிரதான சாலை வழியாக வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையடுத்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.