பள்ளியில் வைர விழா நுழைவு வாயில் திறப்பு
கூத்தாநல்லூர் வட்டம், சித்திரையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் வைர விழாவை முன்னிட்டு, நுழைவு வாயில் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.
கூத்தாநல்லூர் வட்டம், சித்திரையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் வைர விழாவை முன்னிட்டு, நுழைவு வாயில் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் அய்.வி. குமரேசன் தலைமை வகித்தார். உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ப. அறிவழகன், கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் வீ. விமலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியர் கா. லதா வரவேற்றார்.
சித்திரையூர் நடுநிலைப்பள்ளியின் வைர விழாவை முன்னிட்டு, ரூ. 40 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட நுழைவு வாயிலை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் இரா. விஜயா திறந்து வைத்தார்.
முன்னதாக, ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து, பள்ளிக்கு நாற்காலி, பாய், தட்டுகள் உள்ளிட்ட தேவையான பொருள்களை சீர்வரிசையாக தலைமையாசிரியரிடம் வழங்கினர்.
விழாவில், பெற்றோர் - ஆசிரியர் கழகத் தலைவர் ஏ.வி. முருகையன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.