சுயநலத்திற்காக பதவியை ராஜிநாமா செய்யும் அரசியலை மக்கள் நிராகரிப்பார்கள் : சிபிஐ
வட மாநிலங்களில் வகுப்புவாத சக்திகள் அறிமுகப்படுத்திய தரம் தாழ்ந்த அரசியல் தமிழ்நாட்டில் நுழைந்துள்ளது ஜனநாயகத்திற்கு ஆபத்து என சிபிஐ கருத்து...
சுயநலத்திற்காக சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யும் அரசியலை தமிழக மக்கள் நிராகரிப்பார்கள் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
''நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள், பதவி விலகி, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளனர்.
Advertisement
Advertisement
இது தமிழ்நாட்டின் அரசியல் தரம் வீழ்ச்சி அடைந்து வருவதன் வெளிப்படையான அடையாளமாகும்.
தேர்தல் முடிவு வெளியாகி 10 நாட்களுக்குள்ளாகவே, கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, வாக்களித்தார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளானார்கள்.
அடுத்த பத்தாவது நாளில் கட்சி மாறி செல்வதற்காக, வாக்களித்த மக்களின் நம்பிக்கைக்கு துரோகமிழைத்து, சுயநல ஆதாயம் தேடும் மலிவான செயலில் ஈடுபட்டுள்ளனர்.
அரசியல் களத்தில் வட மாநிலங்களில் வகுப்புவாத சக்திகள் அறிமுகப்படுத்திய “ஆயாராம், காய ராம்“ அரசியல், தமிழ்நாட்டில் நுழைந்திருப்பது நெறி சார்ந்த ஜனநாயக அரசியலுக்கு கேடு செய்யும் பேராபத்தாகும்.
இந்த வகைப்பட்ட தரமிழந்த அரசியலை பொதுமக்கள் நிராகரிக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது'' என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.