அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் எம்.ஆர். விஜயபாஸ்கர்!
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தது பற்றி...
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தனது எம்.எல்.ஏ. பதவியை இன்று(ஜூன் 28) ராஜிநாமா செய்தார்.
தொடர்ந்து, வருகின்ற ஜூலை 2 ஆம் தேதி, தவெக தலைவரும் முதல்வருமான சி. ஜோசப் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சட்டப்பேரவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வி காரணமாக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எஸ்.பி. வேலுமணி தரப்பு எம்எல்ஏக்கள் பிரிந்து, சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவுக்கு ஆதரவு அளித்ததைத் தொடர்ந்து அதிமுகவில் இபிஎஸ் அணி, எஸ்.பி. வேலுமணி அணி என இரண்டாகப் பிரிந்தது.
Advertisement
Advertisement
எஸ்.பி. வேலுமணி அணியில் சி.வி. சண்முகம், சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் பலர் இருந்தனர். இதன்பின்னர் பல்வேறு கட்ட அரசியல் நகர்வுகளுக்குப் பிறகு இரு அணிகளும் இணைந்தன.
இதனிடையே, அதிமுக அதிருப்தி அணியில் இருந்த மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா மற்றும் இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ. பதவிகளை ராஜிநாமா செய்து தவெகவில் இணைந்தனர்.
தொடர்ந்து, சி.வி. சண்முகம், சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் தொடர்ந்து கட்சித் தலைமை மீது அதிருப்தியில் இருந்து வந்தனர்.
கடந்த வாரம் சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகரை நேரில் சந்தித்த சி. விஜயபாஸ்கர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்ததுடன், அதிமுகவில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தார்.
இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவை தலைவரை இன்று (ஜூன் 29) நேரில் சந்தித்த எம்.ஆர். விஜயபாஸ்கர், கரூர் எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
கடந்த ஜூன் 25 ஆம் தேதிதான் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு அதிமுக கொள்கைப் பரப்பு இணைச் செயலர் பதவி மீண்டும் வழங்கப்பட்டது.
தொடர்ந்து, அதிமுகவில் இருந்தும் அவர் விலகுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், வருகின்ற ஜூலை 2 ஆம் தேதி தவெக தலைவரும் முதல்வருமான சி. ஜோசப் விஜய் தலைமையில் நடைபெறும் விழாவில், ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் சி. விஜயபாஸ்கரும், எம்.ஆர். விஜயபாஸ்கரும் தவெகவில் இணையவுள்ளனர்.
இதற்கான விழா ஏற்பாடுகள் மிக பிரம்மாண்டமாக செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை அதிமுகவைச் சேர்ந்த 6 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜிநாமா செய்துள்ளனர். தமிழ்நாட்டில் காலியாகவுள்ள சட்டப்பேரவை தொகுதி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
Former AIADMK Minister M.R. Vijayabhaskar resigns!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.