முகப்பு
திருவாரூர்

"தனிநபர் இல்லக் கழிப்பறையின் அவசியத்தை அனைவரும் உணர வேண்டும்'

அனைத்துத் தரப்பு மக்களும் தனிநபர் இல்லக் கழிப்பறையின் அவசியத்தை உணர்ந்து, கழிப்பறை இல்லாத வீடுகளில் உள்ளவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தலாம் என மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் கூறினார்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:10 PM
பகிர்:

அனைத்துத் தரப்பு மக்களும் தனிநபர் இல்லக் கழிப்பறையின் அவசியத்தை உணர்ந்து, கழிப்பறை இல்லாத வீடுகளில் உள்ளவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தலாம் என மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் கூறினார்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் தனிநபர் இல்லக் கழிப்பறை கட்டுவதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் விழிப்புணர்வு குறும்படங்கள் திரையிடப்பட உள்ளன. இதற்கான தொலைக்காட்சி பெட்டி இயக்கத்தை, மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் திங்கள்கிழமை தொடங்கி வைத்துப் பேசியது:
தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் திருவாரூர் மாவட்டத்தை முழுமையான அளவில் சுகாதாரமான மாவட்டமாக மாற்றிடும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 
மாவட்டத்தில் அனைத்து வட்டாரப் பகுதிகளிலும் தனிநபர் கழிப்பறைகள் பெருமளவில் கட்டப்பட்டு வருகின்றன. மேலும், திறந்தவெளியில் மலம் கழித்தல் பழக்கம் இல்லை எனும் நிலையைத் தக்க வைக்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
அதில் ஒரு பகுதியாக மாவட்ட ஆட்சியரகத்தில் தினசரி வருகை தரும் பொதுமக்களுக்குத் தனிநபர் இல்லக் கழிப்பறை கட்டுவதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் பொருட்டு ஒரு தொலைக்காட்சி பெட்டி வைக்கப்பட்டு, அதில் அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ள குறுந்தகடுகள் மூலம் விழிப்புணர்வு குறும்படங்கள் திரையிடப்படும். 
இதன்மூலம் அனைத்துத் தரப்பு மக்களும் தனிநபர் இல்லக் கழிப்பறையின் அவசியத்தை உணர்ந்து, கழிப்பறை இல்லாத வீடுகளில் உள்ளவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தலாம் என்றார்.
நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் க. சக்திமணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் தெய்வநாயகி, செயற்பொறியாளர் செல்வராஜ், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ராஜசேகர், கண்காணிப்பாளர் பாலகுரு மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →