பொதக்குடி தர்கா கந்தூரி விழா சந்தனக்கூடு ஊர்வலம்
கூத்தாநல்லூர் வட்டம், பொதக்குடியில் 350 ஆண்டுகள் பழைமையான ஹஜ்ரத் நூர்முகம்மதுஷாஹ் தர்கா கந்தூரி விழாவில் மின்னொளி சந்தனக் கூடு ஊர்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.
கூத்தாநல்லூர் வட்டம், பொதக்குடியில் 350 ஆண்டுகள் பழைமையான ஹஜ்ரத் நூர்முகம்மதுஷாஹ் தர்கா கந்தூரி விழாவில் மின்னொளி சந்தனக் கூடு ஊர்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.
இத்தர்காவில் கந்தூரி விழாவை முன்னிட்டு ஜன. 18-ஆம் தேதி கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து, ஜன. 25- ஆம் தேதி பூலாங்கொடியேற்றமும், பெரிய மினரா கொடியேற்றுதலும் நடைபெற்றது.
விழாவின், முக்கிய நிகழ்வான சந்தனக் கூடு ஊர்வலம், சனிக்கிழமை (பிப். 3) இரவு நடைபெற்றது. இதையொட்டி, மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக் கூடு ஊர்வலம் பள்ளிவாசலிலிருந்து அருகிலுள்ள கால்பந்து மைதானத்துக்குச் சென்றது. அங்கு, ஜமாத்தார்கள், ஊர் முக்கியஸ்தர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
தொடர்ந்து, வாண வேடிக்கைகளுடன், சந்தனக் கூடு ஊர்வலம், கமாலியாத் தெரு, முகம்மதியாத் தெரு, புதுத் தெரு, மேலத் தெரு, கீழத்தெரு, கரிமியாத் தெரு, நூரியாத் தெரு, அஹமதியாத் தெரு உள்ளிட்ட பகுதிகளின் வழியாக ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு, மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு தர்காவை வந்தடைந்தது.
பின்னர், ரவுலாவில் சிறப்பு துவா ஓதி புனித சந்தனம் பூசுதலும் நடைபெற்றது. தொடர்ந்து, பகல் கூடு ஊர்வலம் நடைபெற்றது.
இதில் கூத்தாநல்லூர், அத்திக்கடை, லெட்சுமாங்குடி, நாகங்குடி, தண்ணீர்குண்ணம், பூதமங்கலம், பாலக்குடி, கொரடாச்சேரி, வடபாதிமங்கலம், முத்துப்பேட்டை, நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமானோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் பிற மதத்தினரும் பங்கேற்று வழிபட்டனர். இதனால், இவ்விழா மத நல்லிணக்க விழாவாக நடைபெற்றதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.