அனைத்து வீடுகளுக்கும் கழிப்பறைகள்: ஆட்சியர்
திருவாரூர் மாவட்டத்தில் திறந்தவெளியில் மலம் கழித்தலற்ற நிலையை உருவாக்க அனைத்து வீடுகளிலும் கழிப்பறைகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார் ஆட்சியர் இல. நிர்மல்ராஜ்.
திருவாரூர் மாவட்டத்தில் திறந்தவெளியில் மலம் கழித்தலற்ற நிலையை உருவாக்க அனைத்து வீடுகளிலும் கழிப்பறைகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார் ஆட்சியர் இல. நிர்மல்ராஜ்.
திருவாரூர் அருகேயுள்ள கீழகாவதுகுடி ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு கிராமசபைக் கூட்டத்தில் மேலும் பேசியது: மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சிகளிலும் திறந்த வெளியில் மலம் கழிப்பதை தவிர்த்து சுகாதார முறையில் இருக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, மாவட்ட நிர்வாகம் ஒவ்வொரு ஊராட்சிகளிலும் சுகாதார தூதுவர்கள் நியமிக்கப்பட்டு கழிப்பறை இல்லாத வீடுகள் கணக்கெடுக்கப்பட்டு, கழிப்பறைகள் கட்டி கொடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த ஊராட்சியில் திறந்த வெளியில் மலம் கழிப்பதை தவிர்ப்போம் என்ற முறையில் அனைத்து வீடுகளுக்கும் கழிப்பறை கட்டப்பட்டு வருகின்றன. கழிப்பறை கட்டாமல் பொது இடங்களில் மலம் கழிக்கும் பொதுமக்கள், கூச்சம் காரணமாக, விஷப் பூச்சிகளுக்கு பயந்து மலம் கழிப்பதை தள்ளிப்போடும்போது உடல் உபாதைகள் ஏற்பட்டு பல்வேறு நோய்கள் மனித உடலில் ஏற்படுவதற்க்கு வாய்ப்பாக அமைகின்றன. வீடுகள்தோறும் கழிப்பறை கட்டுவதால் மலம் கழித்தல் தள்ளிப்போடாமல் உரிய நேரத்துக்கு பயன்படுத்திக்கொள்ள ஏதுவாக இருக்கிறது.
திறந்த வெளியில் மலம் கழித்தல் அற்ற மாநிலமாக தமிழகம் அறிவிக்கப்பட உள்ள நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் கழிப்பறை இல்லாத வீடுகளே இல்லை என்ற நிலையை ஏற்படுத்துவதோடு, திறந்த வெளியில் மலம் கழிப்பதை தவிர்ப்போம் என சபதம் எடுக்க வேண்டும் என்றார் நிர்மல்ராஜ். கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சித் திட்ட இயக்குநர் தெய்வநாயகி, கோட்டாட்சியர் இரா. முத்துமீனாட்சி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.