"தனியார் பள்ளிகளுக்கு நிகரான வசதிகள் அரசுப் பள்ளிகளிலும் உண்டு'
தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப் பள்ளிகளிலும் கல்வி வசதிகள் சிறப்பாகவே உள்ளன என்று திருத்துறைப்பூண்டி தொடக்கக் கல்வி
தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப் பள்ளிகளிலும் கல்வி வசதிகள் சிறப்பாகவே உள்ளன என்று திருத்துறைப்பூண்டி தொடக்கக் கல்வி அலுவலர் ஜெ. இன்பவேணி கூறினார்.
திருவாரூர் அருகேயுள்ள அம்மனூர் ராமகிருஷ்ணா அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் 78-ஆம் ஆண்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு தொடக்கக் கல்வி அலுவலர் ஜெ. இன்பவேணி தலைமை வகித்துப் பேசியது:
இந்த பள்ளி மாணவர்களின் ஆங்கில உச்சரிப்புத்திறன் மிகச் சிறப்பாக உள்ளது. அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் தனியார் பள்ளிகளுக்கு நிகரான வசதிகள் உள்ளன. மேலும் அரசுப் பள்ளிகளில் கல்வியின் தரமும் சிறப்பாக உள்ளது என்பதை உணர்ந்து, பெற்றோர் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க முனைப்பு காட்ட வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில், காரைக்கால் தந்தை பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியரும், கவிஞருமான இரா. மேகலா சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினார். பள்ளிச் செயலர் ரா. பாலு புரவலர்களை கெளரவித்தார்.
இதையடுத்து விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. பின்னர் மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நிகழ்ச்சியில், கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் து. முத்தமிழன், வட்டார மேற்பார்வையாளர் அ. சூசைரத்தினம், பள்ளித் தலைமை ஆசிரியர் பா. விமலா, ஆசிரியர் பயிற்றுநர் ரா. விஜயபாலன், சிறப்பு ஆசிரியர் ம. தேசிகாமணி, ஆசிரியர்கள் ஜெயந்தி, லெட்சுமி மற்றும் கிராமக் கல்விக்குழு, பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், புரவலர்கள், பெற்றோர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.