விவசாயத் தொழிலாளர்கள் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர் ஏ.கே. சுப்பையா: திமுக தலைமை பொதுக் குழு உறுப்பினர் ந.உ. சிவசாமி புகழாரம்
தஞ்சை மாவட்ட விவசாயிகளின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர் முன்னாள் எம்எல்ஏ ஏ.கே. சுப்பையா என, புகழாரம் சூட்டினார் திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் ந.உ. சிவசாமி
தஞ்சை மாவட்ட விவசாயிகளின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர் முன்னாள் எம்எல்ஏ ஏ.கே. சுப்பையா என, புகழாரம் சூட்டினார் திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் ந.உ. சிவசாமி.
நான்கு முறை சட்டப் பேரவை உறுப்பினராக பதவி வகித்த முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் ஏ.கே. சுப்பையா நினைவுதினத்தை முன்னிட்டு, திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள சித்தமல்லியில் அவரது திருஉருவச் சிலைக்கு மாலைஅணிவித்து மரியாதை செலுத்திய பின், ந.உ. சிவசாமி மேலும் பேசியது:
ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் விவசாயத் தொழிலாளர்கள் பண்ணையாள்களாக, ஆண்டான் அடிமை என்ற முறைகளினால் நிலச்சுவான்தார்களால் கொடுமைப்படுத்தப்பட்டிருந்தபோது, அதிலிருந்து மீட்டு அவர்களின் வாழ்வாதாரத்துக்கு வழி வகுத்துவர் ஏ.கே. சுப்பையா.
மேலும் பி. சீனிவாசராவ், மணலி கந்தசாமி, களப்பாள் குப்பு போன்ற முன்னணித் தலைவர்களுடன் இணைந்து பணியாற்றி விவசாயத் தொழிலாளர்கள் வாழ்வில் ஒளியேற்றக் காரணமாக இவர் இருந்தவர் என்றால் அது மிகையாகாது. வீட்டுமனை இல்லாத விவசாயத் தொழிலாளர்களுக்காக போராடி அவர்களுக்கு வீட்டுமனை கிடைக்க காரணமாகவும் இருந்தவர் என்றார்.
இந்நிகழ்ச்சியில், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர்கள் ராஜமாணிக்கம், ஜெகவீரபாண்டியன், அருள்செல்வன், சட்டப் பேரவை உறுப்பினர் ப. ஆடலரசன், திமுக ஒன்றியச் செயலாளர்கள் வி.எஸ்.ஆர். தேவதாஸ், பால. ஞானி, தனராஜ், குமரேசன், ஆர்.டி. சரவணன், பழனியப்பன், மூவலூர் மூர்த்தி, இளையபெருமாள், தலைமை பொதுக் குழு உறுப்பினர்கள் தலையாமங்கலம் பாலு, போலீஸ் பன்னீர், நகரச் செயலர்கள் ஆர்.எஸ். பாண்டியன், வீரா. கணேசன், எம்.எஸ். கார்த்திக், வழக்குரைஞர் அணி மாவட்டச் செயலர் கோ. தர்மராஜ், பழஞ்சூர் செல்வம் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்று புகழஞ்சலி செலுத்தினர்.
இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் மக்களவை உறுப்பினர் ஏ.கே.எஸ். விஜயன் மற்றும் குடும்பத்தினர் செய்திருந்தனர்.