ஆழித் தேரில் எழுந்தருளினார் தியாகராஜர்: களைகட்டியது திருவாரூர்
திருவாரூர் ஆழித் தேரில் தியாகராஜர் ஞாயிற்றுக்கிழமை இரவு எழுந்தருளியதையடுத்து, பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கூட்டம்
திருவாரூர் ஆழித் தேரில் தியாகராஜர் ஞாயிற்றுக்கிழமை இரவு எழுந்தருளியதையடுத்து, பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கூட்டம் கூட்டமாகவும், குடும்பத்துடனும் வந்து தியாகராஜரை தரிசித்துசென்ற வண்ணம் உள்ளனர். இதனால், திருவாரூர் தற்போதே களைக்கட்டத் தொடங்கியது.
திருவாரூரில் ஆழித் தேரோட்டம் மே 27- ஆம் தேதி நடைபெற உள்ளது. ஆழித் தேரில் தியாகராஜர் அமர்ந்து வர, தேரானது ஆடி, அசைந்தபடி செல்லும். தேரில் அமர்வதற்காக தேவாசிரியன் மண்டபத்திலிருந்து, அஜபா நடனத்துடன் தியாகராஜர் கொண்டுவரப்படுவார்.
நிகழாண்டு தேரோட்டத்துக்காக, ஞாயிற்றுக்கிழமை இரவு 10.30 மணிக்கு தேவாசிரியன் மண்டபத்திலிருந்து தியாகராஜர் புறப்பட்டு ஆழித்தேரில் எழுந்தருளினார். தேரோட்ட நாள் வரை, தேரில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
பக்தர்கள் தரிசனம்: பக்தர்கள் தேரில் ஏறி தியாகராஜரை தரிசிப்பதற்கு வசதியாக, பொது தரிசன வழி, சிறப்பு தரிசன வழி ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சிறப்பு தரிசன வழிக்கு ரூ. 50 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திங்கள்கிழமை காலையிலிருந்து பக்தர்கள் தியாகராஜரை தரிசித்து வருகின்றனர்.
தற்போது ஆழித் தேரில் உள் கட்டுமானப் பணிகளும், வெளி அலங்காரப் பணிகளும் முடிவடைந்த நிலையில், தேர் பிரமாண்டமாக காட்சியளிக்கிறது.
ஆழித்தேருக்கு அலங்காரப் பணி நடைபெறும்போதே, ஏராளமான மக்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து தேரை பார்த்துச் சென்றனர். தற்போது, தேர் பணிகள் 60 சதவீத அளவுக்கு முடிவடைந்ததையடுத்து, தேரின் அழகை ரசிக்க வரும் மக்களின் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
சிலர் தேரின் அருகில் சென்று செல்ஃபி (சுயப்படம்) எடுத்து உடனடியாக சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இதனால், பிரமாண்டத் தேரின் அழகை, பல்வேறு நாடுகளில் வசிக்கும் திருவாரூர் பகுதி மக்கள் வலைதளங்களில் பார்த்து, மகிழ்ச்சியைபகிர்ந்துகொள்கின்றனர்.
தேரோட்டம் நடைபெறுவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பே தியாகராஜர், ஆழித் தேருக்கு எழுந்தருளியுள்ளதால், போலீஸ் தரப்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வெடிகுண்டு பிரிவு போலீஸார் 4 பேர் சுழற்சி முறையில் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்படும் என போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.