முகப்பு
திருவாரூர்

திருராமேஸ்வரம் கோயிலில் வைகாசி பெருவிழா கொடியேற்றம்

கூத்தாநல்லூர் வட்டம், திருராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில், வைகாசிப் பெருவிழா கொடியேற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

Updated On : 22 மே, 2018 at 12:53 AM
பகிர்:

கூத்தாநல்லூர் வட்டம், திருராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில், வைகாசிப் பெருவிழா கொடியேற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
ஆயிரத்து 500 ஆண்டுகள் பழைமையான இக்கோயிலில், மங்கள நாயகி சமேதராக ராமநாத சுவாமி அருள்பாலிக்கிறார். இக்கோயிலில் லெட்மணர், சீதா பிராட்டியாருடன் ராமர் தங்கியதாகவும், அக்னியும், பிரம்மாவும் சிவபெருமானுக்கு பூஜைகள் செய்த தலமாகவும் புராண வரலாறு கூறுகிறது.
இத்தகைய சிறப்புபெற்ற இக்கோயிலில் வைகாசிப் பெருவிழாவை முன்னிட்டு, கொடி மரத்துக்கு மஞ்சள், பால் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைக்குப்பின், நந்திகேஸ்வரர் உருவம் பொறித்த கொடியேற்றப்பட்டது. பின்னர், இரவில் விநாயகர் மூஷிக வாகனத்திலும், அம்பாள் ரிஷப வாகனத்திலும் வீதியுலா நடைபெற்றது.
தொடர்ந்து, 10 நாள்கள் நடைபெறும் இவ்விழாவில் சூர்யபிரபை, அன்ன வாகனம், ரிஷப வாகனம், சிம்ம வாகனம், மஞ்சம் மற்றும் குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடு, பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெறவுள்ளது.
முக்கிய நிகழ்வாக தேரோட்டம் மே 28-ஆம் தேதி காலை 9 மணிக்கு வடம் பிடிக்கப்படுகிறது. இக்கோயிலில் கடந்த 200 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழாண்டுதான் தேரோட்டம் நடைபெறவுள்ளது.
இதற்காக செங்கமலத்தாயார் கல்வி அறக்கட்டளை மகளிர் கல்லூரி சார்பில் ரூ.30 லட்சத்தில் புதிய தேர் வடிவமைக்கப்பட்டு, கடந்த ஜனவரி மாதம் வெள்ளோட்டம் விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக கொடியேற்ற விழாவில், செங்கமலத்தாயார் கல்வி அறக்கட்டளை மகளிர் கல்லூரி தாளாளர் வி. திவாகரன் உள்ளிட்டோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் செயல் அலுவலர் பெ. பொன்னழகு, தக்கார் சு. நாகராஜன் உள்ளிட்டோர் செய்துவருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.