ஜபல்பூரில் சுற்றுலாப் பயணிகள் படகு கவிழ்ந்து 9 பேர் பலி, 5 பேர் மாயம்!
ஜபல்பூரில் உள்ள பர்கி அணையில் சுற்றுலாப் பயணிகள் படகு கவிழ்ந்ததில் 9 பேர் பலியானது குறித்து...
ஜபல்பூர்: மத்தியப்பிரதேசம் மாநிலம், ஜபல்பூரில் உள்ள பர்கி அணையில் சுற்றுலாப் பயணிகள் படகு கவிழ்ந்ததில் 9 பேர் பலியாகினர், 5 பேர் காணவில்லை, 15 பேர் மீட்கப்பட்டடுள்ளனர். தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் ராணுவத்தினர் மாயமானவர்களை தேடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
மத்தியப்பிரதேசம் மாநிலம், ஜபல்பூர் மாவட்டத்தில் நர்மதா ஆற்றின் குறுக்கே பர்கி அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணையில் சுற்றுலாப் பயணிகளுக்காக படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், பர்கி அணையில் வியாழக்கிழமை சொகுசு சுற்றுலா படகில் 29 சுற்றுலாப் பயணிகள் சென்றுள்ளனர். படகு அணையின் மையப்பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. படகில் இருந்தவர்கள் தண்ணீரில் தத்தளித்து கொண்டு உதவிக்கு சத்தமிட்டு அழைத்துள்ளனர். தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்புக் குழுவினர் தண்ணீரில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 15 பேரை பத்திரமாக மீட்டுள்ளனர். 4 பேரை சடலங்களாக மீட்டுள்ளனர், 10 பேரைக் காணவில்லை. தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் ராணுவத்தினர் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்று அந்த மாநில அமைச்சர் ராகேஷ் சிங் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், சுற்றுலாப் பயணிகள் படகு கவிழ்ந்த விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளதாகவும், பலியானவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், காணாமல் போன 5 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக அமைச்சர் தர்மேந்திர லோதி தெரிவித்துள்ளார்.