வலங்கைமான் வேளாண் கூட்டுறவு சங்கத்தில் மகளிர் குழுக்களுக்கு கடனுதவி
வலங்கைமான் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தில்அண்மையில் நடைபெற்ற முதல் நிர்வாகக் குழுக் கூட்டத்தில்
வலங்கைமான் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தில்அண்மையில் நடைபெற்ற முதல் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் உதவிகள் வழங்கப்பட்டன.
இக்கூட்டத்துக்கு சங்கத் தலைவர் சா.குணசேகரன் தலைமை வகித்தார். கூட்டத்தில், சங்க நிர்வாகக் குழு தேர்தல் ஜனநாயக முறையில் நடைபெற ஆவன செய்த தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும், கடந்த 2017-ஆம் ஆண்டு பயிர்க்கடன் பெற்று திருப்பிச் செலுத்திய பயனாளிகளுக்கு முதல் கட்டமாக 36 பேருக்கு ரூ. 10 லட்சத்து 84 ஆயிரத்து 880 சம்பா பயிர்க் கடன் வழங்கப்பட்டது. அத்துடன், தவணை தவறாமல் கடனைத் திருப்பிச் செலுத்திய ஜெயம் மகளிர் குழுவுக்கு ரூ. 5 லட்சம், பத்ரகாளியம்மன் மகளிர் குழுவுக்கு ரூ.2 லட்சத்து 50 ஆயிரம், அஷ்டலெட்சுமி மகளிர்சுய உதவிக் குழுவுக்கு ரூ.5 லட்சம் கடன் வழங்கப்பட்டது.
மேலும், 13 நபர்களுக்கு விவசாய நகைக் கடன் ரூ. 9 லட்சத்து 65 ஆயிரம் மற்றும் தனிநபர் கடனும் வழங்கப்பட்டன. மளிகைக் கடைக்கு கடன் வழங்க அனுமதியளிக்கப்பட்டது.
கூட்டத்தில் சங்க துணைத் தலைவர் பா.பூபதி, நிர்வாகக் குழு உறுப்பினர்கள் க.சம்பத், தா.காமராஜ், வ.சின்னப்பா, வீ.ஆறுமுகம், தி.ராஜேஸ்வரி, மு.ரஜினி, ரா.ராஜா, ஜெ.தனலெட்சுமி, த.ரவிச்சந்திரன், சங்கச் செயலாளர் (பொ) ப.கலைவாணன் மற்றும் சங்க பணியாளர்கள் கலந்து கொண்டனர்.நிறைவில் சங்க எழுத்தர் ப.உலகநாதன் நன்றி கூறினார்.