நன்னிலம் அருகேயுள்ள ஸ்ரீவாஞ்சியம் அருள்மிகு மங்களாம்பிகை சமேத ஸ்ரீ வாஞ்சிநாதசுவாமி கோயிலில் மாசிமக பிரமோத்ஸவத்தையொட்டி திருக்கல்யாண மகோத்ஸவம் சனிக்கிழமை நடைபெற்றது. தேரோட்டம் திங்கள்கிழமை (பிப்.18) நடைபெறுகிறது.
இக்கோயிலில் மாசி மகத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றுவருகிறது. திருக்கல்யாணம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. இதையொட்டி, திருமண மேடையில் ஸ்ரீவாஞ்சிநாதரும், மங்களாம்பிகை அம்பாளும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளியதும் சிவாச்சாரியார் திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தார்.
இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
இதைத்தொடர்ந்து, இரவில் யானை வாகனத்தில் ஸ்ரீ மங்களாம்பிகை சமேத வாஞ்சிநாத சுவாமி வீதியுலாப் புறப்பாடு நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் திங்கள்கிழமை (பிப்.18) நடைபெறுகிறது. காலை 10 மணியளவில் தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. நிறைவு நாள் நிகழ்ச்சியாக பிப்ரவரி 20-ஆம் தேதி காலை பஞ்சமூர்த்திகளுக்கு பிராயச்சித்த அபிஷேகமும், காலபைரவர் அபிஷேகமும், மாலையில் சட்டைநாதர் சுவாமி புறப்பாடும் நடைபெறவுள்ளது.