கஜா புயல்: திமுக கண்டன ஆர்ப்பாட்டம்
மன்னார்குடி அருகேயுள்ள கோட்டூர் பகுதியில் கஜா புயல் பாதிப்பு குறித்த கணக்கெடுப்பில் முறைகேடு நிகழ்ந்துள்ளதை
மன்னார்குடி அருகேயுள்ள கோட்டூர் பகுதியில் கஜா புயல் பாதிப்பு குறித்த கணக்கெடுப்பில் முறைகேடு நிகழ்ந்துள்ளதை கண்டித்து கோட்டூரில் திமுக சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடந்த ஆண்டு இறுதியில் வீசிய கஜா புயலால், கோட்டூர் ஒன்றியம் முழுவதும் வீடுகள், விளைப் பொருள்கள், தென்னை, வாழை, மாமரம் ஆகியவை சேதடைந்ததுடன், கால்நடைகளும் உயிரிழந்தன. இதனால், அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டனர். பாதிப்பு குறித்து அரசுத் துறையினர் கணக்கெடுப்பு நடத்தி நிவாரணப் பொருள்கள் மற்றும் நிவாரணத் தொகை ஆகியவை மிக குறைந்த எண்ணிகையில் பயனாளிகளுக்கு வழங்கியுள்ளதாகவும், பாதிப்புக்குள்ளான மற்றவர்களுக்கு வழங்கவில்லை என கூறப்படுகிறது.
இதையடுத்து, பாதிப்புக்கான கணக்கெடுப்பு முறையாக செய்யவில்லை எனவும், பல்வேறு குளறுபடிகள் நிகழ்திருப்பதாகவும், பயனாளிகள் பட்டியல் கட்சி அரசியல் பார்க்கப்பட்டு ஒருதலைபட்சமாக எடுக்கப்பட்டு குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் நிவாரணம் வழங்கப்பட்டிருப்பதாகவும், வறுமைக்கோட்டு பட்டியல் தயாரிப்பதில் குளறுபடிகள் ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. இதை கண்டித்தும், புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும், வறுமைக் கோட்டு பட்டியலை முறையாக தயாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோட்டூர் திமுக தெற்கு மற்றும் வடக்கு ஒன்றியம் சார்பில், கோட்டூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வடக்கு ஒன்றியச் செயலர் வி.எஸ்.ஆர். தேவதாஸ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், திருத்துறைப்பூண்டி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினர் ப. ஆடலரசன், முன்னாள் எம்பி, ஏ.கே.எஸ். விஜயன், கோட்டூர் வடக்கு ஒன்றியச் செயலர் பால.ஞானவேல் உள்ளிட்ட திமுகவினர் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.