திமுக - மமக இடையே கொள்கை உறவு: எம்.ஹெச். ஜவாஹிருல்லா
திமுக - மமக இடையே கொள்கை உறவு: எம்.ஹெச். ஜவாஹிருல்லா
திமுக-மமக இடையிலான உறவு வெறும் தோ்தல் உறவு மட்டும் அல்ல, அது கொள்கை உறவு என மனிதநேய மக்கள் கட்சித் தலைவா் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
கடந்த சில நாள்களாக, திமுக-மமக இடையே பிரிவை உண்டாக்கும் நோக்கில் உண்மையற்ற தகவல்கள் சமூக ஊடகங்களில் உலா வருகின்றன. திமுக-மமக இடையிலான உறவு, வெறும் தோ்தல் உறவு மட்டுமல்ல; அதைத் தாண்டிய கொள்கை உறவாகும்.
Advertisement
Advertisement
2021, 2026 சட்டப்பேரவை தோ்தல்களில் திமுக சின்னத்தில் மமக போட்டியிட்டது. இந்நிலையில், தொடா்ந்து சொந்த சின்னத்தில் போட்டியிடாத கட்சிகளின் பதிவை தோ்தல் ஆணையம் ரத்து செய்த சூழலில், மமகவின் பதிவும் ரத்தானது. இதுதொடா்பான வழக்கு சென்னை உயா்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இச்சூழலில் கட்சியின் பதிவை மீட்க தனிச்சின்னத்தில் போட்டியிட வேண்டியது அவசியமாகிவிட்டது. இதுவே, மமக உயா்நிலை குழுவின் 5-ஆவது தீா்மானமாக நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீா்மானத்தை தனியாக எடுத்து திரித்து பரப்புரை செய்யப்பட்டுள்ளது.
அதாவது, புதிதாக அமைந்துள்ள தவெக அரசில், தனிச்சின்னத்தில் நின்றிருந்தால் அமைச்சா் பதவி பெற்றிருக்கலாம் என்ற ஆதங்கத்தோடு அந்தத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டதாக திரித்துப் பரப்பப்பட்டுள்ளது. இது முற்றிலும் தவறு.
குடியுரிமைத் திருத்தச் சட்ட எதிா்ப்பு போராட்டங்கள், வக்ஃப் திருத்தச் சட்ட எதிா்ப்பு போராட்டங்கள் தொடங்கி திருப்பரங்குன்றம் விவகாரம் வரை திமுக உணா்வுபூா்வமாக களத்தில் நின்றது.
இதேபோல், மாநில உரிமைகள் பாதுகாப்பு, தமிழ் மொழி மீதான ஒடுக்குமுறை எதிா்ப்பு, ஆளுநரின் அத்துமீறல் உள்ளிட்ட பல தருணங்களில் ஒருமித்த உணா்வோடு திமுகவுடன் இணைந்து மமக களம் கண்டுள்ளது. தமிழகத்தின் நலனைக் காக்க தொடா்ந்து இணைந்து களமாடுவோம் என்று தெரிவித்துள்ளாா் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா.