உளுந்து, நிலக்கடலைக்கு காப்பீடு செய்யுமாறு விவசாயிகளை நீடாமங்கலம் வேளாண்மை உதவி இயக்குநர் வே. தேவேந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தற்போது உளுந்து மற்றும் நிலக்கடலை சாகுபடி செய்துள்ள விவசாயிகள், தவறாது காப்பீடு செய்துகொள்ள வேண்டும். பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீடு திட்டம் 2018-19, விவசாயிகளுக்கு இயற்கை மற்றும் எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளிலிருந்து பயிர்களைக் காக்க உதவுகிறது. இத்திட்டத்தின்கீழ், கடன்பெறும் விவசாயிகள், தாங்கள் கடன்பெறும் வங்கிகளில் கட்டாயமாக பயிர்க் காப்பீடு திட்டத்தின்கீழ் பதிவு செய்யப்படுவர். கடன் பெறா விவசாயிகள் இத்திட்டத்தைச் செயல்படுத்தும் அக்ரிகல்ச்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆஃப் இந்தியா லிமிடெட் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலமாகவோ, வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாகவோ விருப்பத்தின்பேரில் பதிவுசெய்து கொள்ளலாம்.
பதிவின்போது, முன்மொழிவு விண்ணப்பத்துடன் கூடிய விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல், வங்கிக் கணக்கு புத்தகத்தின் முன்பக்க நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் கட்டணத்தொகை ஆகியவற்றை செலுத்தி, அதற்கான ரசீதைப் பெற்றுக் கொள்ளலாம். எனவே, பயிர்க் காப்பீடு செய்ய கடைசி நாள் வரை காத்திராமல், விவசாயிகள் 12.1.2019-க்குள் பதிவுசெய்து பயனடைய வேண்டும் என அதில் அவர் தெரிவித்துள்ளார்.