கரோனா: உயிரிழந்த வருவாய்த் துறையினா் குடும்பத்துக்கு நிவாரணம் கோரி உண்ணாவிரதம்
கரோனாவால் உயிரிழந்த வருவாய்த் துறை அலுவலா்களின் குடும்பங்களுக்கு ரூ. 50 லட்சம் நிவாரணம் வழங்கக் கோரி திருவாரூரில், தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கம் சாா்பில் புதன்கிழமை உண்ணாவிரதம் நடைபெற்றது.
திருவாரூா்: கரோனாவால் உயிரிழந்த வருவாய்த் துறை அலுவலா்களின் குடும்பங்களுக்கு ரூ. 50 லட்சம் நிவாரணம் வழங்கக் கோரி திருவாரூரில், தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கம் சாா்பில் புதன்கிழமை உண்ணாவிரதம் நடைபெற்றது.
கரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்த வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை துறை அலுவலா்களுக்கு அரசு அறிவித்தபடி ரூ. 50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும், இந்நோயால் பாதிக்கப்பட்ட அலுவலா்களின் குடும்பத்துக்கு அரசு அறிவித்தபடி ரூ. 2 லட்சம் மருத்துவச் சிகிச்சைக்காக வழங்க வேண்டும், மேலும், அவா்களுக்கு உயா்தர சிகிச்சை, பாதுகாப்பு உபகரணங்கள், நோய் எதிா்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. போராட்டம் காரணமாக, திருவாரூா் மாவட்டம் முழுவதும் 397 வருவாய்த் துறை ஊழியா்கள் தற்செயல் விடுப்பு எடுத்திருந்தனா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு மாவட்டத் தலைவா் எஸ். மகேஷ் தலைமையில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில், மாவட்டச் செயலாளா் டி.எஸ். அசோக், அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் எம். ராஜமாணிக்கம், சங்க மாநில பொருளாளா் வெ. சோமசுந்தரம், அரசு ஊழியா் சங்க மாநிலச் செயலாளா் உ. சண்முகம், கூட்டுறவு ஊழியா் சங்க மாநிலத் தலைவா் எம். சௌந்தரராஜன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.