ஐபிஎல் முதல் போட்டி: கெடுபிடியாகும் சின்னசாமி திடல்
ஐபிஎல் 2026 க்கான முதல் போட்டி நடைபெறும் சின்னசாமி விளையாட்டுத் திடலில் மேற்கொள்ளவிருக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக...
ஐபிஎல் 2026 க்கான முதல் போட்டி நடைபெறும் சின்னசாமி விளையாட்டுத் திடலில் மேற்கொள்ளவிருக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக்கப்படும் என பெங்களூரு நகர காவல் ஆணையர் சீமந்த் குமார் சிங் தெரிவித்துள்ளார்.
இந்தாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 28 ஆம் தேதி பெங்களூரில் உள்ள சின்னசாமி விளையாட்டுத் திடலில் தொடங்கவிருக்கிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோத உள்ளன.
இதுகுறித்து, செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பெங்களூரு நகர காவல் ஆணையர் சீமந்த் குமார் சிங்,
"எதிர்பார்க்கப்படும் 40,000 ரசிகர்களைக் கையாள்வதற்காகக் கூடுதல் அவசரகால வெளியேறும் வழிகள், ஆம்புலன்ஸ்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் போன்ற முக்கிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. டிக்கெட் இல்லாத ரசிகர்கள் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
இந்த திடலில் கடந்த கால ஐபிஎல் போட்டிகளின்போது, அதிக ரசிகர் கூட்டத்தால் ஏற்பட்ட சிக்கல்களைக் கருத்தில்கொண்டு இதுமாதிரியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
மேலும், கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் கோப்பையை வென்ற ஆர்சிபி அணியின் வெற்றிப் பேரணியில் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.