ஐபிஎல் போட்டிகள் 74-லிருந்து 94-ஆக உயர்த்தப்படுமா? பிசிசிஐ விளக்கம்!
அடுத்தாண்டு முதல் ஐபிஎல் போட்டிகள் 74-லிருந்து 94-ஆக உயர்த்தப்படுமா என்ற கேள்விக்கு பிசிசிஐ செயலர் அளித்த விளக்கம் பற்றி...
அடுத்தாண்டு முதல் ஐபிஎல் போட்டிகள் 74-லிருந்து 94-ஆக உயர்த்தப்படுமா என்ற கேள்விக்கு பிசிசிஐ செயலர் தேவஜித் சாய்கியா வியாழக்கிழமை (ஜூன் 18) விளக்கமளித்தார்.
ஐபிஎல் தொடரின் லீக் சுற்றில் நடைபெறும் 70 போட்டிகள் முடிந்த பிறகு, புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறும். பிளே ஆஃப் சுற்றில் தகுதிச்சுற்று, எலிமினேட்டர், இறுதிப்போட்டி என 4 போட்டிகள் நடக்கும்.
இதன் மூலம் ஒரு ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் போட்டிகளையும் சேர்த்து மொத்தம் 74 போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்த நடைமுறையை மாற்றி மொத்தம் 94 போட்டிகள் நடத்த திட்டமிட்டு வருவதாக ஐபிஎல் சேர்மன் அருண் துமால் தெரிவித்திருந்தார்.
Advertisement
Advertisement
இது குறித்து பிசிசிஐ செயலர் தேவஜித் சாய்கியா பேசியதாவது:
போட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதைப் பொறுத்தவரை, அது தற்போதைக்கு சாத்தியமில்லை. ஏனெனில் வீரர்கள் பல்வேறு நாடுகளிலிருந்து வருவதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இந்த இரண்டு மாத கால அவகாசத்தைப் பெறுவதற்கே மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகிறோம்.
இந்த நிலையில், மேலும் போட்டிகள் அதிகரித்தால் நாள்களும் நீடிக்கும். இது ஒரு கடினமான சூழலை உருவாக்கும். ஏனென்றால் மற்ற நாட்டு வீரர்கள் அவர்களுடைய தேசத்தின் அணிக்காகவும் விளையாட வேண்டும். இதனால், சர்வதேச போட்டிகளுக்கான அட்டவணைகள் மாறும்.
அதனால், இந்த நேரத்தில் போட்டிகளின் எண்ணிக்கையை 74-லிருந்து 94-ஆக அதிகரிப்பது குறித்த எந்த விவாதமும் நடைபெறவில்லை. அப்படியிருந்தாலும் இது உடனடியாக நடக்கப்போவதும் இல்லை. வரும் ஆண்டுகளில் நிலைமை எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியாது. ஆனால் இந்தத் தருணத்தில் போட்டிகளில் எண்ணிக்கையை 74-லிருந்து 94-ஆக உயர்த்துவதற்கான எந்த சூழலையும் நான் காணவில்லை.
ஏனென்றால், இதற்கு இந்தியாவை மட்டும் கருத்தில் கொள்ளக்கூடாது. மாறாக ஐசிசியின் மற்ற கிரிக்கெட் நாடுகளையும் கருத்தில் கொள்ள வேண்டும். குறிப்பாக ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா. மேற்கிந்தியா ஆகிய நாடுகளின் வீரர்களும் இந்தத் தொடரில் விளையாடுகின்றனர் என்று தேவஜித் சாய்கியா தெரிவித்தார்.
BCCI Secretary Devajit Saikia clarified on Thursday (June 18) whether the number of IPL matches would be increased from 74 to 94 starting next year.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.