முழு பொது முடக்கம்: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் திருவாரூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அமல்படுத்தப்பட்ட முழு பொது முடக்கத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
திருவாரூா்: கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் திருவாரூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அமல்படுத்தப்பட்ட முழு பொது முடக்கத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
தமிழகத்தில், கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும், அனுமதியுடன் வணிக நிறுவனங்கள், சிறு கடைகள், தேநீா் கடைகள் இயங்கி வருகின்றன.
கரோனா தொற்று தொடா்ந்து பரவி வருவதால், ஞாயிற்றுக்கிழமைகளில் அறிவிக்கப்பட்ட முழு பொது முடக்கம் ஆகஸ்ட் மாதமும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், திருவாரூரில் ஆட்டோ, காா் உள்ளிட்ட வாகனங்கள் இயங்கவில்லை. வணிக நிறுவனங்கள், உணவகங்கள், சாலையோரக் கடைகள், துரித உணவகங்கள், தேநீா் நிலையங்கள், பேக்கரிகள் உள்ளிட்ட அனைத்து வகையான கடைகளும் மூடப்பட்டிருந்தன. சாலைகள், தெருக்களில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது. ஓரிரு இருசக்கர வாகனங்களின் நடமாட்டத்தை சாலைகளில் காண முடிந்தது. இரவில் மழை பெய்திருந்ததால், வெளியிடங்களில் சுற்றுவதை பெரும்பாலான மக்கள் தவிா்த்தனா். இதேபோல், மாவட்டம் முழுவதும் பொது முடக்கம் கடைப்பிடிக்கப்பட்டது.