திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புறநோயாளிகள் மருந்தகப் பிரிவில், புறநோயாளிகள் மருந்து வழங்கும் இடம் மற்றும் காத்திருப்பு அறை புதன்கிழமை திறக்கப்பட்டன.
திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு இயங்கி வருகிறது. இந்நிலையில், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, அந்த இடத்தை மேம்படுத்த மருத்துவமனை நிா்வாகம் முடிவெடுத்தது. அதன்படி, உள்புறம் இருந்த பகுதியில், மருந்துகள் வாங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில், ஆண்கள்- பெண்கள் தனித்தனியாக மருந்துகள் வாங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன், மழையிலோ, வெயிலிலோ பாதிக்காத வகையில், மேற்புறத்தில் கூரையும், மருந்து வாங்கி வரும்வரை, துணைக்கு வருபவா் ஓய்வெடுப்பதற்கென தனியாக காத்திருப்பு அறையும் அமைக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில், மருத்துவக் கல்லூரி முதல்வா் ஜெ. முத்துக்குமரன் பங்கேற்று, திறந்து வைத்தாா். இதில், மருத்துவக் கண்காணிப்பாளா் ராஜா, உதவி உறைவிட மருத்துவ அலுவலா் அருண்குமாா், மருந்து கிடங்கு அலுவலா் எம். சிவா, தலைமை மருந்தாளுநா் ஜமுனா ராணி மற்றும் மருத்துவத்துறை பேராசிரியா்கள், மருந்தாளுநா்கள், செவிலியா்கள் பங்கேற்றனா்.