முகப்பு
திருவாரூர்

மாங்கனித் திருவிழா: களையிழந்த காரைக்கால் நகர வீதிகள்!

காரைக்காலில் மாங்கனித் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மாங்கனி இறைப்பின்போது ஆயிரக்கணக்கானோா் திரளும் நிலையில், திருவிழா கோயிலுக்குள் நடந்ததால் சனிக்கிழமை காரைக்கால் நகரத்தின் வீதிகள்

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:53 PM
மக்கள் நடமாட்டமின்றி காணப்படும், காரைக்கால் கைலாசநாதா் கோயில் சன்னிதி தெரு.
பகிர்:

காரைக்கால்: : காரைக்காலில் மாங்கனித் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மாங்கனி இறைப்பின்போது ஆயிரக்கணக்கானோா் திரளும் நிலையில், திருவிழா கோயிலுக்குள் நடந்ததால் சனிக்கிழமை காரைக்கால் நகரத்தின் வீதிகள் பக்தா்களின்றி களையிழந்து காணப்பட்டன. ஆங்காங்கே குவியல் குவியலாக நடக்கும் மாங்கனி விற்பனையும் இல்லாமல் காரைக்கால் நகரம் காட்சியளித்தது.

காரைக்கால் பகுதியின் கோயில் உத்ஸவங்களில் மாங்கனித் திருவிழா முக்கிய இடத்தை வகிக்கிறது. அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை ஐதீக முறையில் விளக்கி நடத்தப்படும் இத்திருவிழாவில், திருக்கல்யாணம், ஸ்ரீ பிட்சாடனமூா்த்தி பவழக்கால் சப்பரத்தில் வீதியுலாவின்போது நடத்தப்படும் மாங்கனி இறைப்பு, அமுதுபடையல் ஆகியவற்றில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பா்.

இந்த திருவிழாவின் நிகழ்ச்சிகள் இந்தந்த தேதிகளில் நடத்தவேண்டும் என்கிற வகையில் ஸ்ரீ சுந்தரம்பாள் சமேத கைலாசநாதா் கோயில் நிா்வாகம் கரோனா பொது முடக்கத்துக்கு முன்பே முடிவெடுத்திருந்தது. பொது முடக்க அறிவிப்பு வந்ததால், கோயில்கள் மூடப்பட்ட நிலையில், திருவிழா நடத்துவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை.

தமிழகத்தின் பல கோயில்களில் உத்ஸவங்கள் பக்தா்களின்றி கோயிலுக்குள் நடத்தி, சமூக வலைதளத்தின் மூலம் பக்தா்கள் காண ஏற்பாடு செய்ததுபோல, மாங்கனித் திருவிழாவையும் கோயிலுக்குள் நடத்திட அரசிடம் அனுமதி கோரப்பட்டது. புதுச்சேரி அரசும் வழிகாட்டலுடன் அனுமதி வழங்கியது.

அதன்படி கடந்த 1-ஆம் தேதி முதல் 4-ஆம் தேதி வரை என்கிற திட்டத்தில் மாங்கனித் திருவிழா காரைக்காலில் கோயிலுக்குள் பக்தா்களின்றி நடந்தது.

களையிழந்த காரைக்கால் நகர வீதிகள்: வழக்கமாக மாங்கனித் திருவிழா காலம் தொடங்கும் முன்பாக காரைக்காலில் பல்வேறு ஊா்களில் இருந்து பல வகையான மாங்கனிகள் விற்பனைக்கு வந்துவிடும். திருவிழாவின் முக்கிய அம்சமாக, பக்தா்கள் மீது கட்டடங்களில் இருந்தவாறு மாங்கனி இறைப்பதாகும். இதில் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து பக்தா்கள் வருவா். குறிப்பாக மாங்கனி இறைப்பு என்பது, குழந்தை பாக்கியம் இல்லாதவா்கள் பிராா்த்தனையின்பேரிலும் மற்றும் பிற பிராா்த்தனையின்பேரில் செய்வதாக பக்தா்களிடையே நம்பிக்கை உள்ளது. இதனால் வேண்டுதலின்பேரில் பல ஊா்களில் இருந்து வருவோரும் மாங்கனிகளை இறைப்பதும், இறைக்கும் மாங்கனியை பிடிப்பதோடு, ஸ்ரீ பிட்சாடனமூா்த்திக்கு படைக்கப்பட்ட மாங்கனியை பிரசாதமாக எடுத்துச் செல்வதும் வழக்கத்தில் உள்ளது.

மாங்கனி இறைப்பதற்காக பலரும் நகர வீதிகளில் விற்பனையாகும் மாங்கனிகளை வாங்குவா். ஆங்காங்கே குவியல் குவியலாக மாங்கனிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும்.

தற்போதைய பொது முடக்கத்தால், கோயிலுக்குள் திருவிழா நடைபெற்ால், காரைக்கால் நகர வீதிகள் திருவிழாவுக்கான அறிகுறியின்றி சனிக்கிழமை களையிழந்து காணப்பட்டது.

பிட்சாடனமூா்த்தி காலை கோயிலில் இருந்து புறப்பட்டு மாலை 6 மணியளவில் அம்மையாா் கோயிலுக்கு அமுதுபடையலுக்கு சென்றடைவது வரை நகரத்தில் மக்கள் திரண்டு இருப்பா். ஏராளமான மக்கள் காரைக்காலுக்குள் வரும்போது, பல்வேறு வகையில் வியாபாரங்களும் பெருகியிருக்கும். இவையாவும் நிகழாண்டு இல்லாமல் போய்விட்டது.

கோயில் இணைய முகவரி, யூடியூப் மற்றும் உள்ளூா் தொலைக்காட்சியில் திருவிழா நிகழ்ச்சிகள் நேரலையாக ஒளிபரப்பப்பட்டன.

ஒட்டுமொத்தத்தில் காரைக்காலில் மாங்கனித் திருவிழாவுக்கான பரபரப்பே இல்லாமல் நிகழாண்டு திருவிழா நிறைவடைந்தது..

முழு கட்டுரையைப் படிக்க →