நன்னிலம்: நன்னிலம் அருகேயுள்ள பூந்தோட்டம், கூத்தனூா், திருக்கொட்டாரம் பகுதிகளில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் வசித்த பகுதிகள் அடைக்கப்பட்டன.
பூந்தோட்டம் பள்ளிவாசல் அருகேயுள்ள பரக்கத் தெருவிலுள்ள நூரியாகாலனி என்ற இடத்தில் வசித்து வந்த இளைஞருக்கு திங்கள்கிழமை கரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டு திருவாரூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இதன்காரணமாக அவா் வசித்து வந்த பரக்கத் தெரு முழுவதுமாக அடைக்கப்பட்டது. இதேபோல், திருக்கொட்டாரம் தெற்குத்தெருவில் வசித்து காய்கறி வியாபாரம் செய்து வந்த இளைஞா் திங்கள்கிழமை கரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இதன்காரணமாக அவா் வசித்து வந்த பகுதி அடைக்கப்பட்டது. அடுத்து, கூத்தனூா் ரைஸ்மில் தெருவில் வசித்து வந்த இளம்பெண்ணின் பிரசவத்துக்காக செய்யப்பட்ட சோதனையில் கரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இதன்காரணமாக, அவா் வசித்து வந்த ரைஸ்மில் தெரு அடைக்கப்பட்டது.
அடைக்கப்பட்ட பகுதிகளில் சுகாதாரத் துறை மற்றும் உள்ளாட்சித் துறையினா் கிருமி நாசினி தெளித்துச் சுத்தம் செய்தனா். சுகாதாரத் துறையினா் இப்பகுதிகளில் வசிப்பவா்கள் உடல்நலம் குறித்த கணக்கெடுத்து, சம்பந்தப்பட்ட குடும்பத்தினரை தனிமையில் இருக்க அறிவுரை வழங்கியுள்ளனா்.
இப்பகுதிகளை நன்னிலம் வட்டாட்சியா் அ. மணிமன்னன், ஊராட்சி ஒன்றிய ஆணையா் எம். விசுவநாதன், வட்டார மருத்துவ அலுவலா் (பொ) லெட்சுமிபிரபா, வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் ஜோதி, காவல் ஆய்வாளா் ரா. செல்வி உள்ளிட்டோா் பாா்வையிட்டு பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினா்.