திருப்பூரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 200-க்கும் சிலிண்டர்கள் பறிமுதல்!
திருப்பூரில் முறையான அனுமதியின்றி பதுக்கி வைக்கப்பட்டிருந்த 200-க்கும் மேற்பட்ட வீட்டு உபயோக சிலிண்டர்களை பறிமுதல் குறித்து...
திருப்பூர்: திருப்பூரில் முறையான அனுமதியின்றி பதுக்கி வைக்கப்பட்டிருந்த 200-க்கும் மேற்பட்ட வீட்டு உபயோக சிலிண்டர்களை பறிமுதல் செய்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
திருப்பூர் சாமுண்டிபுரம் அருகே தாய் மூகாம்பிகை நகரில் முறையான அனுமதியின்றி சிலிண்டர்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட வழங்கல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் மாவட்ட வழங்கல் அலுவலர் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சரவணன், குடிமைப்பொருள் (வடக்கு) தனி வட்டாட்சியர் ராகவி தலைமையிலான அலுவலர்கள் மற்றும் குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வு ஆய்வாளர் ராஜசேகர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வில் முறையான அனுமதியின்றி 200-க்கும் மேற்பட்ட வணிக மற்றும் வீட்டு சமையல் எரிவாயு உருளைகள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், மேற்கண்ட சிலிண்டர்கள் விநாயகா கேஸ் ஏஜென்சிக்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து பதுக்கி வைக்கப்பட்டிருந்த சிலிண்டர்களை பறிமுதல் செய்து ஏஜென்சியின் உரிமையாளர் மோகன் என்பவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிலிண்டர்கள் தட்டுப்பாடு இருந்து வரும் நிலையில் 200-க்கு மேற்பட்ட சிலிண்டர்களை பதுக்கி வைத்திருந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.