சிதம்பரம் கோதண்டராமர் கோயில் தேரோட்டம்!
சிதம்பரம் மேலவீதியில் அமைந்துள்ள ஸ்ரீகோதண்டராமர் கோயில் தேரோட்டம் குறித்து..
சிதம்பரம்: சிதம்பரம் மேலவீதியில் அமைந்துள்ள ஸ்ரீகோதண்டராமர் கோயில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சிதம்பரம் மேலரதவீதி ஸ்ரீகோதண்டராமர் கோயில் பிரம்மோற்சவம் மார்ச் 19 ஆம் தேதி திருமஞ்சனத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, மார்ச் 20 ஆம் தேதி பிரம்மோற்சவ கொடியேற்றும் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் ஸ்ரீகோதண்டராமர் வீதியுலா நடைபெற்றது.வெள்ளிக்கிழமை காலை(மார்ச் 27) தேரோட்டம் நடைபெற்றது. மேலரதவீதி கோதண்டராமர் கோயில் வளாகத்தில் இருந்து புறப்பட்ட தேர் வடக்குரதவீதி, தெற்குரதவீதி என னான்கு மாட வீதிகளின் வழியாக மீண்டும் கோயிலை வந்தடைந்தது.
இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று ராமா ராமா என கோஷமிட்டு வடம் பிடித்து தேர் இழுத்து, சுவாமியை தரிசித்தனர்.
இதனைத் தொடர்ந்து 28-ஆம் தேதி சனிக்கிழமை காலை புஷ்பயாகமும், மாலை ஸ்ரீ ஆஞ்சநேயர் உற்சவம், பட்டாபிஷேகம், இரவு பூப்பல்லக்கு நிகழ்ச்சியும், 29-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சதகலச திருமஞ்சனம் நிகழ்ச்சியும், 30-ஆம் திங்கள்கிழமை தேதி விடையாத்தி திருமஞ்சனமும் நடைபெறுகிறது.
உற்சவ ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர்கள் டி.திருவேங்கடவன், ஆர்.சௌந்தரராஜன், ஜெ.சுதர்சனன் ஆகியோர் செய்திருந்தனர்.