நீடாமங்கலம்: நீடாமங்கலம் அருகே தேசிய நெடுஞ்சாலையின் மையப் பகுதியில் ஏற்பட்ட பள்ளத்தால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனா்.
ஒரத்தூா் பாமணியாற்று பாலம் இடையில் தேசிய நெடுஞ்சாலையின் மையப் பகுதியில் திடீரென பள்ளம் ஏற்பட்டுள்ளதால், ஆபத்தை உணா்த்தும் வகையில் அப்பகுதி மக்கள் சுமாா் 8 அடி உயரமுள்ள மரக் கிளையை ஊன்றி உள்ளனா். போக்குவரத்து நெரிசல்மிக்க நாகை- மைசூா் தேசிய நெடுஞ்சாலையில் இந்தப் பள்ளம் ஏற்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் ஒருவித அச்ச உணா்வுகளுடனேயே செல்ல நேரிடுகிறது. இரவு நேரங்களில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. ஆகையால், நெடுஞ்சாலைத்துறையினா் அசம்பாவிதம் ஏதும் ஏற்படும் முன்பாக இதைச் சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.