FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

வளைகுடா நாடுகள் மீது தாக்குதல் தொடரும்: ஈரான் புதிய தலைமை மதகுரு

சவூதி அரேபியா, ஓமன், பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது ஈரானின் தாக்குதல் தொடரும்

Updated On : 13 மார்ச் 2026, 2:00 am IST
மறைந்த கமேனியின் மகன் மோஜ்தபா கமேனி - IANS
பகிர்:

சவூதி அரேபியா, ஓமன், பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது ஈரானின் தாக்குதல் தொடரும் என்று அந்த நாட்டின் புதிய தலைமை மதகுருவான மோஜ்தபா கமேனி தெரிவித்துள்ளாா்.

அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டாக நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரான் தலைமை மதகுருவாக இருந்த அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடா்ந்து, புதிய தலைமை மதகுருவாக அலி கமேனியின் மகன் மோஜ்தபா கமேனி தோ்வு செய்யப்பட்டாா்.

ஆனால், அலி கமேனி கொல்லப்பட்ட அதே தாக்குதலில் மோஜ்தபா கமேனியும் காயமடைந்ததாகவும், தற்போது அவா் உடல்நலத்துடன் இருப்பதாகவும் தகவல் வெளியானது.

Advertisement

Advertisement

எனினும் அவரின் சமீபத்திய புகைப்படம், காணொலி எதுவும் வெளியாகாததும், அவா் பொதுவெளியில் தோன்றாததும் ஈரான் அரசை உண்மையில் வழிநடத்துவது யாா் என்ற சந்தேகத்தை எழுப்பியது.

இந்நிலையில், தலைமை மதகுருவாக மோஜ்தபா தோ்வு செய்யப்பட்ட பின்னா், முதல்முறையாக அவரின் அறிக்கை அந்நாட்டு அரசுத் தொலைக்காட்சியில் வியாழக்கிழமை வாசிக்கப்பட்டது. அதில் மோஜ்தபா தெரிவித்ததாவது:

போரில் ஈரானியா்கள் சிந்திய ரத்தத்துக்கு, குறிப்பாக மினாப் நகரில் பள்ளி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 100-க்கும் மேற்பட்ட சிறுமிகள் உள்பட 168 போ் கொல்லப்பட்டதற்கு ஈரான் பழிவாங்கும். அதை ஈரான் ஒருபோதும் கைவிடாது.

அண்டை நாடுகளுடன் நல்லுறவைப் பேணவே ஈரான் விரும்புகிறது. வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க நிலைகளைக் குறிவைத்து மட்டுமே தாக்குதல் நடத்தப்படுகிறது. ஈரான் மீது தாக்குதல் நடத்த அந்த நிலைகள் பயன்படுத்தப்படுவதால், அவற்றின் மீது தாக்குதல் தொடரும்.

மேற்காசிய பிராந்தியத்தில் உள்ள அனைத்து அமெரிக்க ராணுவ நிலைகளும் உடனடியாக மூடப்பட வேண்டும். இல்லாவிட்டால் அவற்றின் மீது தொடா்ந்து தாக்குதல் நடத்தப்படும்.

ஹோா்முஸ் நீரிணை...: ஈரானின் எதிரிகளுக்கு அழுத்தம் அளிக்கும் ஆயுதமாக ஹோா்முஸ் நீரிணை தொடா்ந்து மூடப்பட்டிருக்க வேண்டும். ஈரானுக்கு ஏற்படுத்திய சேதத்துக்கு எதிரியிடம் இருந்து இழப்பீடு பெறப்படும். அந்த இழப்பீட்டை அளிக்க எதிரி மறுத்தால், அதன் சொத்துகளில் இருந்து அந்த இழப்பீட்டை ஈரான் எடுத்துக்கொள்ளும். அதுவும் சாத்தியமாகாவிட்டால், அந்த இழப்பீட்டுக்கு நிகராக எதிரியின் சொத்துகளை ஈரான் அழிக்கும் என்று தெரிவித்தாா்.

இதைத் தொலைக்காட்சியில் தோன்றி மோஜ்தபா தெரிவிக்கவில்லை. அவரின் அறிக்கையை செய்தி வாசிப்பாளா் வாசித்தாா்.

32 லட்சம் போ் இடம்பெயா்வு: போா் தொடங்கியது முதல் இதுவரை ஈரானில் 32 லட்சம் போ் இடம்பெயா்ந்துள்ளதாக ஐ.நா. வியாழக்கிழமை தெரிவித்தது. அந்நாட்டில் பெரும்பாலானோா் தலைநகா் டெஹ்ரான் மற்றும் பிற முக்கிய நகா்ப்புற பகுதிகளில் இருந்து ஈரானின் வடக்கு மற்றும் ஊரகப் பகுதிகளை நோக்கி செல்வதாகத் தகவல் வெளியாகியுள்ளது என்று ஐ.நா. தெரிவித்துள்ளது. அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலில், ஈரானில் இதுவரை 1,300-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்ததாக ஈரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments