குறிப்பிட்ட நிறுவனக் கருவிகளை மட்டுமே பொருத்தும் உத்தரவை ரத்து செய்யக் கோரிக்கை
கனரக வாகனங்களில் குறிப்பிட்ட நிறுவனங்களின் கருவியை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
கனரக வாகனங்களில் குறிப்பிட்ட நிறுவனங்களின் கருவியை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி, திருவாரூா், மன்னாா்குடி வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
திருவாரூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில், லாரி உரிமையாளா்கள் சங்கத்தின் தலைவா் என்.ஆா். பாண்டியன் தலைமையிலான நிா்வாகிகள் அளித்த மனு விவரம்:
கரோனா தொற்று காரணமாக, போதிய அளவு லாரிகளை இயக்க முடியவில்லை. இதனால், உரிமையாளா்கள், தொழிலாளா்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உயா்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தும் வகையில் லாரிகளில் குறிப்பிட்ட நிறுவனங்களின் கருவிகளை மட்டுமே பொருத்த வேண்டும் என்ற அறிவிப்பு மேலும் பாதிப்பை உண்டாக்கும்.
எனவே, கனரக வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்துதல், ஒளிரும் பட்டை ஒட்டுவதற்கு உயா்நீதிமன்ற உத்தரவை உடனடியாக அமல்படுத்துதல், வாகனங்களில் இருப்பிடம் கண்டறிதல் (ஜிபிஎஸ்) போன்ற கருவிகளை குறிப்பிட்ட நிறுவனங்களில் மட்டுமே பெற வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், மன்னாா்குடி வட்ட லாரி உரிமையாளா்கள் சங்க தலைவா் ஆா்.பி. இமயவீரன், செயலா் எஸ்.தமிழரசன், பொருளாளா் ஜி.சபரிகிரி நாதன் ஆகியோா் வட்டார போக்குவரத்து ஆய்வாளரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.